10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம்..!!

By Soundarya on வைகாசி 20, 2026

Spread the love

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மிகச்சிறந்த சாதனை படைத்துள்ளனர். இதில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.47% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.15% ஆகவும் பதிவாகியுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் தங்களின் பதிவு எண்களைக் கொண்டு www.tnresults.nic.in என்கிற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் உடனடியாக அறிந்து கொள்ளலாம்.

மாநில அளவில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் 97.57% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் 97.54% தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தையும், தஞ்சாவூர் மாவட்டம் 97.41% பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. மேலும், திருச்சி மாவட்டம் 97.31% தேர்ச்சியுடன் நான்காம் இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் 97.30% தேர்ச்சியுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன. சாதனை படைத்த மாவட்டங்களுக்கும், தேர்ச்சியடைந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வித்துறை மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.