டெல்லி கிழக்கு வினோத் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த 10 வயது மாணவி, பள்ளிக்கு புத்தகம் கொண்டு வராத காரணத்திற்காக ஆசிரியர் ஒருவரால் கொளுத்தும் வெயிலில் நிற்க வைக்கப்பட்டுள்ளார். தண்டனையாக வெயிலில் நீண்ட நேரம் நின்ற அந்த சிறுமி, வெம்மை தாக்குப்பிடிக்க முடியாமல் திடீரென மயக்கம் அடைந்து சுருண்டு விழுந்தார்.
சிறுமி மயங்கி விழுந்ததைக் கண்டு பதறியடித்த பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக அவரது தாயார் அஞ்சலிக்கு அவசரமாகத் தகவல் கொடுத்தனர். பின்னர், அந்த மாணவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த துயரச் சம்பவம் குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த சிறுமிக்கு ஏற்கனவே உடல்நலப் பாதிப்பு இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவியின் மரணத்திற்கான முழுமையான காரணத்தைக் கண்டறிய பள்ளி நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
