பிக்பாஸ் சீசன் 7-வது நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த வாரம் இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நபர்கள் தற்பொது மீண்டும் விருந்தினர்களாக உள்ளே வந்துள்ளனர். வெளியே சென்று அனைத்தையும் பார்த்து விட்டு உள்ளே வந்துளவர்கள், மற்றவர்களை என்ன செய்ய காத்திருக்கிறார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் வேளையில், வினுஷா நிக்சனை என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சீரியல் மற்றும் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை வினுஷா. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ராப் பாடல் பாடி பிரபலமானவர் நிக்சன். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டினுள் இருந்தப் போது அக்கா, தங்கை என பழகியதாக பல இடங்களில் கூறியிருக்கின்றனர். ஆனால், ஒரு சமயம் நிக்சன் ஐஸூவிடம் பேசியப் போது, வினுஷா தனக்கு ஏற்றார் போல இல்லை என உருவக் கேலி செய்தது மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. ஒரு அக்காவை, தம்பி இப்படி எல்லாமா பேசுவது என அப்போதிலிருந்து நிக்சனுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கு தான் எந்தவித தவறான நோக்கத்திலும் சொல்லவில்லை என்று சப்பைக்கட்டு கட்டி தப்பினார் நிக்சன். கமலும் இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் அர்ச்சனா இதை மீண்டும் கிளறினார். அப்போது கோபமடைந்த நிக்சன், மறுபடியும் வினுஷா பத்தி யாராவது பேசுனா சொருகீருவேன் என கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கமல் அவரை விசாரித்து இது போன்ற வார்த்தைகளை இங்கு பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு நிக்சன் வெளியேறிய நிலையில், வீட்டிற்குள் விருந்தினராக வந்திருக்கும் வினுஷாவிடம், தம்பியை சந்தித்து பேசினீர்களா என விஷ்ணு கேட்க, ஃபோனில் மட்டும் பேசியதாகவும், மீதத்தை ஷோவில் பேசிக் கொள்ளலாம் என விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார் வினுஷா. அதுமட்டுமின்றி 70 கேமராக்களுக்கு மத்தியில் தானே நிக்சன் தன்னைப் பற்றி கூறினான்? அதே கேமராக்கள் மத்தியில் தான் அவரிடம் பேசிக்கலாம் என்று இருப்பதாகவும் கூறியிருக்கிறார் வினுஷா. எதிர் வரும் வாரத்தில் நிக்சன் வீட்டினுள் வரும்பட்சத்தில் நிச்சயம் ஒரு பூகம்பம் வரும் என்கின்றனர் ரசிகர்கள்.