விஜய்க்கு காலையிலேயே ஷாக்…. தவெக-வில் இருந்து கூண்டோடு விலகல்?… மா.செ.,க்கள் கூட்டத்தில் நடந்த அந்த ஒரு சம்பவம்….!

By Nanthini on மாசி 12, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில், தற்போது நிலவும் உட்கட்சிப் பூசல்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசிய விதம் பல நிர்வாகிகளிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, ஒருசில மாவட்டங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அங்குள்ளவர்களுக்கு வரும் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ வழங்கப்பட வாய்ப்பில்லை என்று அவர் வெளிப்படையாகக் கூறியதாகத் தெரிகிறது. கட்சியின் வெற்றிக்காகத் தங்களை அர்ப்பணித்த நிர்வாகிகளிடம், “சீட் இல்லை என்றாலும் தளபதியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்” என அவர் முன்வைத்த கோரிக்கை, தேர்தல் கனவில் இருந்த மா.செ.,க்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்தத் திடீர் அறிவிப்பால் மனமுடைந்த சில மாவட்ட செயலாளர்கள், கட்சியில் இருந்து விலகும் முடிவில் இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. பல ஆண்டுகளாகக் களப்பணியாற்றிய தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது என்ற சூழல் உருவானதால், மாற்றுப் பாதையைத் தேடும் முனைப்பில் அவர்கள் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தலைமையின் இத்தகைய பிடிவாதமான அணுகுமுறை, தேர்தல் நேரத்தில் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திவிடுமோ என்ற கவலை தொண்டர்களிடையே எழுந்துள்ளது. கட்சியின் தொடக்கக் காலத்திலேயே இத்தகைய உட்கட்சிப் பூசல்கள் வெடித்திருப்பது, விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு ஒரு சவாலான சூழலை உருவாக்கியுள்ளது.