பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான ஒரு வருட கால அரசியல் மோதல், சமீபத்தில் தைலாபுரம் தோட்டத்தில் நடந்த சந்திப்போடு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ராமதாசின் 61-வது திருமண நாளில் தந்தையும் மகனும் கட்டித்தழுவி, கண்ணீர் மல்க சமரசம் செய்துகொண்ட நிகழ்வு தொண்டர்களிடையே நிம்மதியைத் தந்திருந்தாலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, இந்த மோதலில் ராமதாஸ் அணியின் தீவிர முகமாகச் செயல்பட்ட சேலம் மேற்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், இந்தத் திடீர் சமரசத்தால் அரசியல் ரீதியாகத் தனித்து விடப்பட்ட உணர்வில் தவித்து வருகின்றனர்.
அப்பா-மகன் மோதலை நிஜமென்று நம்பி, அன்புமணியைக் கடுமையாக விமர்சித்து, களத்தில் காரைக்கூட இழந்து நின்ற நிர்வாகிகளுக்கு இந்தச் சமரசம் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது. “ராமதாஸை நம்பி பயணித்து பல கோடிகளை இழந்து, இப்போது நட்டாற்றில் நிற்கிறோம்” என்று குமுறும் அருள், சென்னை மற்றும் வட மாவட்டங்களைச் சேர்ந்த அதிருப்தி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இன்னும் ஓரிரு நாளில் தனது நல்ல முடிவை அறிவிப்போம் என்று அவர் கொடுத்துள்ள ‘பஞ்ச்’, பாமக கூடாரத்திற்குள் மிகப்பெரிய பதற்றத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது அருள் முன்னெடுக்கும் இந்த அதிருப்திப் பயணம், அவர் ஒரு புதிய கட்சியைத் தொடங்குவது அல்லது வளர்ந்து வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நோக்கி நகர்வது என்ற இரு வழிகளிலேயே முடியும் எனக் கணிப்புகள் வெளியாகின்றன.
ஒருவேளை அருள் புதிய கட்சி தொடங்கினால், அது வன்னியர் சமூக வாக்குகளையும் வட மாவட்டக் கட்டமைப்பையும் பலமாகக் கொண்ட பாமகவுக்குப் பெரும் சவாலாக மாறும். காடுவெட்டி குருவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட பிளவுகளைப் போல, ராமதாஸ் அணியில் தீவிரமாக உழைத்த திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களின் முக்கிய நிர்வாகிகள் அருள் பக்கம் நகர்ந்தால், அது பாமகவின் வாக்கு வங்கியை நேரடியாகப் பாதிக்கும். பாமகவின் கோட்டையாகக் கருதப்படும் தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களின் பாரம்பரியக் கட்டமைப்பில் இது மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தக் கூடும்.
மறுபுறம், அருளும் அவரது ஆதரவாளர்களும் விஜய் தலைமையிலான ‘தவெக’ பக்கம் சாய்ந்தால், அது வட மாவட்ட அரசியல் கணக்குகளை தலைகீழாக மாற்றும். புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்து வரும் தவெக-விற்கு, வட மாவட்டங்களில் வலுவான மற்றும் தேர்தல் கள அனுபவமிக்க நிர்வாகிகள் தேவைப்படும் சூழலில், அருள் போன்ற களப்பணியாளர்களின் வரவு அக்கட்சிக்குக் கூடுதல் பலத்தைத் தரும்; அதேநேரம் பாமகவின் வாக்குகள் தவெகவிற்கு மடைமாறவும் இது வழிவகுக்கும். அன்புமணியை அன்று விமர்சித்துவிட்டு, இன்று மீண்டும் அவரிடமே சரணடைவதை ஏற்க முடியாத மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், அருள் எடுக்கப்போகும் அந்த இறுதி முடிவு பாமகவின் எதிர்கால அரசியல் பலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. குறிப்பாக, பல தசாப்தங்களாக தமிழக…
தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, தீவிர அதிமுக ஆதரவாளராக இருந்து கடந்த தேர்தல்களில் அக்கட்சிக்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட…
திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது…
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை…
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் சென்று…