தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவை விரிவாக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பினருக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பது குறித்த சுவாரசியமான பின்னணித் தகவல்கள் தவெகவின் மேல்மட்ட வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ளன. திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தவெக பக்கம் சாய்ந்த காங்கிரஸ் மற்றும் விசிக, இடதுசாரிகளின் வெளி ஆதரவோடு தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்திருந்தது. இருப்பினும், திமுகவின் வாக்கு வங்கியைப் பெற்று வென்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதை முதல்வர் விஜய்யால் முழுமையாக ஜீரணிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அரசியல் உளைச்சலில் இருந்து விடுபடவே, அதிமுகவின் ஆதரவைப் பெற தவெக தரப்பு முதலில் எடப்பாடி பழனிச்சாமியை அணுகியதாகவும், அவர் மறுத்ததால் அதிருப்தி அணியை நாடியதாகவும் சொல்லப்படுகிறது.
அமைச்சரவையில் இடம் பெறலாம் என்ற நம்பிக்கையில், எடப்பாடியின் முடிவை எதிர்த்து அதிமுகவின் அதிருப்தியாளர்கள் தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர். ஆனால், அண்மையில் நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால் வேலுமணி மற்றும் சண்முகம் தரப்பினர் முதல்வர் விஜய் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. அதிருப்தியாளர்களை அமைச்சரவையில் சேர்த்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று எடப்பாடி பழனிச்சாமி விடுத்த எச்சரிக்கை ஒருபுறம் இருந்தாலும், விஜய் இவர்களைப் புறக்கணித்ததற்குப் பின்னால் இதுவரை வெளிவராத ஒரு மிக முக்கியமான ‘எண்ணிக்கை’ காரணம் இருப்பதாக தவெக சீனியர்கள் விவரிக்கிறார்கள்.
தவெகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தபோது, தங்களிடம் 35 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவே வேலுமணி மற்றும் சண்முகம் தரப்பு தவெக சீனியர்களிடம் உறுதி அளித்துள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்க வேண்டுமானால், மொத்தமுள்ள 47 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது குறைந்தது 32 பேரின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்தே விஜய் இந்தத் திட்டத்திற்கு ஆரம்பத்தில் பச்சைக்கொடி காட்டியுள்ளார். 35 எம்.எல்.ஏ.க்களின் பலத்துடன் ஒரு வலிமையான பெரும்பான்மையைப் பெற்றுவிட்டால், வெளி ஆதரவு தரும் கட்சிகளைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற கணக்கிலேயே அமைச்சரவை பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளும் சுமுகமாக நடந்துள்ளன.
ஆனால், நிஜமான சோதனை என்று வந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிருப்தியாளர்களால் 25 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை மட்டுமே திரட்ட முடிந்தது. இந்த 25 பேரை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களை அமைச்சரவையில் சேர்த்தால், அது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்டச் சிக்கல்களையும், தவெக அரசுக்கு தேவையற்ற சர்ச்சைகளையும் உருவாக்கும் என்று முதல்வர் விஜய் கருதியுள்ளார். “கட்சித் தாவல் சட்டத்திற்கு பங்கம் இல்லாத அளவுக்கு எண்ணிக்கை இருந்தால் இப்போதும் நாம் அவர்களைச் சேர்க்கலாம், இப்போதைக்கு இந்த சட்டச் சிக்கல் வேண்டாம்” என்று விஜய் திட்டவட்டமாகக் கூறியதாலேயே, கடைசி நேரத்தில் அதிமுக அதிருப்தியாளர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்பட்டதாக தவெக வட்டாரங்கள் தெளிவுபடுத்துகின்றன.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…