பராசக்தி படத்துக்குப் பிறகு இந்த படம்தான்… நீதிமன்றக் காட்சிகளில் அனல் பறந்த ’விதி’..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் நீதிமன்றக் காட்சிகளுக்குப் புகழ்பெற்ற படம் என்றால் அது கலைஞர் வசனம் எழுதி சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி திரைப்படம்தான். அந்த படத்தில் நீதிமன்றத்தில் சமூக இழிவுகளைப் பற்றி சிவாஜி கணேசன் கோபாவேசமாக பேசும் வசனங்கள் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் தருணமாக அமைந்தன. அப்படி ஒரு நீதிமன்றக் காட்சி 30 ஆண்டுகளுக்குப் பிறகு விதி திரைப்படத்தில் ரசிகர்களுக்குக் காணக் கிடைத்தது.

1984 ஆம் ஆண்டு வெளியான விதி திரைப்படத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம், சுஜாதா மற்றும் ஜெய்ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

   

நியாயம் காவலி எனும் தெலுங்கு படத்தின் தமிழ் வடிவம்தான் விதி. இந்த படத்தை தான் நடிகர் திலகம் சிவாஜியின் பெரும்பாலான படங்களை இயக்கிய கே.விஜயன் தமிழில் விதி என்ற பெயரில் ரீமேக் செய்தார். சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார். ஆரூர் தாஸ் வசனங்களை எழுத ஆனந்த வள்ளி பாலாஜி தயாரித்திருந்தார்.

அப்போது மைக் மோகனாக வெள்ளி விழா படங்களில் நடித்து வந்த மோகன் துணிந்து இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதாநாயகியான ராதா, நாயகன் ராஜாவை நம்பி தன்னையே அவனிடம் இழந்து விடுவாள். ஆனால் அதன் பின் ராஜா ராதாவை திருமணம் செய்ய மறுத்து விடுவான்.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த ராதாவிற்கு தான் கற்பமடைந்திருப்பது தெரியவரும். இதையடுத்து ராதா பிரபல வக்கீலான சகுந்தலாவிடம் செல்வாள். நாயகிக்கு ஆதரவாக சகுந்தலாவும், நாயகனுக்கு ஆதரவாக ராஜாவின் அப்பாவான தயாநிதியே வாதாடுவார். அவர்களுக்கு இடையேயான உரையாடல் அனல் பறக்கும் விதமாக எழுதியிருந்தார் ஆரூர் தாஸ்.

திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் இணைந்து உடலுறவு கொண்டால் அதற்கான தண்டனையும் அவமானமும் பெண்ணுக்கு மட்டும் தான் தவறு செய்த ஆண்கள் தப்பித்து விடுகிறார்கள். இன்பத்தில் பங்கு கொள்ளும் ஆண்கள் பாவத்தில் மட்டும் ஏன் பங்கு கொள்வதில்லை என்று உலுக்கி எடுப்பார் சகுந்தலா. மேலும் தற்போது ராஜாவுக்காக வாதாடும் தயாநிதியே தன்னைக் காதலித்து ஏமாற்றியவர்தான் என்றும் தன்னுடைய வளர்ப்பு மகள் அவருக்குப் பிறந்தவள்தான் என்றும் சொல்ல ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

இந்த படத்தின் வசனங்கள் எவ்வளவு பிரபலம் என்றால் வீட்டு விஷேசங்களில் குழாய் கட்டி பாட்டு போடுவதை போன்று இந்த படத்தின் ஆடியோ ஒலிபரப்பட்டு ரசிக்கப்படும் அளவுக்கு பிரபலமாக இருந்துள்ளது.

author avatar