அஜித்-விஜய் படங்கள் வெளியாகிறது என்றாலே தமிழ்நாட்டில் கொண்டாட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. அதிலும் பண்டிகை தினங்களில் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் 2014-ம் ஆண்டு இவர்களது வீரம்-ஜில்லா படங்கள் ஒரே நாளில் வெளியான போது, இருபடங்கள் நல கலெக்ஷனை வசூல் செய்தது என்றாலும் கூட விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இதில் பெரிதும் பாதிப்படைந்தனர். அதன் பிறகு இவர்களது படங்கள் ஒரே நாளில் வெளியாவது தவிர்க்கப்பட்டது.
கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு இவர்களது படங்கள் ஒரே நாளில் வெளியானது. கடந்த வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு படமும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் அடுத்தடுத்த நாட்கள் வெளியானது. தமிழ்நாடே அந்த நாட்களுக்காக எதிர்பார்த்து காத்திருந்தது. அதிரடி படங்களை தொடர்ந்து ஒரு கமர்ஷியலாக குடும்பங்கள் கொண்டாடும் படமாக வந்தது விஜய்யின் வாரிசு திரைப்படம். தெலுங்கில் நேரடியாக விஜய் இப்படம் மூலம் களமிறங்கினார். தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய், சரத்குமார், ஷாம், சங்கீதா, எஸ்.ஜே.சூர்யா என பலர் நடிப்பில் இப்படம் வெளியானது.
மறுபுறம் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியானது துணிவு. தொடர்ந்து குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமான படங்களில் நடித்து வந்த அஜித், பக்கா ஆக்ஷன் படமாக துணிவு படத்தில் நடித்திருந்தார். துணிவு படத்தை போனி கபூர் தயாரித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் பட விநியோகத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியது. மேலும், வாரிசு படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்த நிலையில், படத்தின் சில பகுதிகளில் மட்டும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தை விநியோகித்தது.
இரு படங்களும் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூல் ரீதியாக இருப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது எனலாம். தமிழ்நாடு அளவில் வாரிசு படத்தை விட துணிவு படம் நல்ல வசூலை பெற்றதாக கூறப்பட்டது. அதே நேரம், ஒட்டுமொத்தமாக, துணிவு படத்தை வாரிசு வசூலில் வீழ்த்தியதாகவும் தகவல்கள் தெரிவித்தன. விஜய்யின் வாரிசு திரைப்படம் ஒட்டுமொத்தமாக 295 கோடி ரூபாயும், அஜித்தின் துணிவு திரைப்படம் 225 கோடி ரூபாயும் வசூல் செய்தது. வழக்கம் போல இரு நடிகர்களின் ரசிகர்களும், அவரவர் படங்களை உயர்த்தி சமூக வலைதளங்களில் சண்டையிட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.