ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் உயிரிழந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தற்போது இறுதிச் சடங்கு ஊர்வலங்கள் தொடங்கியுள்ளன. நாட்டின் தொடர் போர்ச் சூழல் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் என்ற அச்சத்தினால், இவ்வளவு காலம் அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் இந்த இறுதி ஊர்வலத்தில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் காரணமாக 1,500 முதல் 3,000 பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக ஈரான் அதிகாரிகள் அவசரக் காலத் திட்டங்களைத் தீட்டியுள்ளதாக ஜெர்மனியின் பிரபல ‘டி வெல்ட்’ (Die Welt) நாளிதழ் அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்டுள்ளது.
இதனை எதிர்கொள்ளும் விதமாக, ஊர்வலத்தின் போது உயிரிழப்பவர்கள் மற்றும் காணாமல் போவோரைக் கையாள்வதற்காக அதிகாரிகள் தனிக் குழு ஒன்றை அமைத்துள்ளனர். தலைநகர் தெஹ்ரானில் உள்ள ‘பெஹெஷ்ட்-இ ஜஹ்ரா’ மயானத்தில் ஆயிரக்கணக்கான புதிய கல்லறைகள் அவசர அவசரமாகத் தோண்டப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடுமையான வெயிலும், கட்டுக்கடங்காத கூட்டமும் சேர்ந்து நிலைமையை மோசமாக்கிவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் அதிகாரிகள், இறுதி ஊர்வலத்தில் 3,000 பேர் வரை இறந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சனிக்கிழமையன்று தெஹ்ரானில் தொடங்கிய கமேனியின் இறுதிச் சடங்குகள், புனித நகரான கோம், ஈராக்கின் நஜாஃப் மற்றும் கர்பாலா வழியாக, வரும் வியாழக்கிழமை மஷாத் நகரில் உடல் அடக்கத்துடன் நிறைவடையவுள்ளது.
இந்த இறுதி ஊர்வலத்திற்காக ஈரான் சமீபத்திய ஆண்டுகளில் கண்டிராத மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளதுடன், தெஹ்ரான் முழுவதும் வாகனப் போக்குவரத்துக்குக் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. ஈரானில் இதுபோன்ற இறுதி ஊர்வலங்களின் போது மக்கள் இறப்பது இது முதல் முறையல்ல; கடந்த 2020-ல் தளபதி காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 56 பேரும், 1989-ல் ருஹொல்லா கொமேனியின் இறுதி ஊர்வலத்தில் 8 பேரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மக்கள் தங்குவதற்காகப் பள்ளிகளும், மசூதிகளும் தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டு, தற்காலிக சமையல் கூடங்களும், மக்களை ஏற்றி வர ஆயிரக்கணக்கான பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கூட்ட நெரிசல் ஒருபுறமிருக்க, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அமைப்புகளின் தாக்குதல் ஏதேனும் நடந்துவிடுமோ என்ற பெரும் பயமும் ஈரானுக்கு உண்டு. குறிப்பாக, ஈரானின் அடுத்த உச்ச தலைவராகக் கருதப்படும் மொஜ்தாபா கமேனி “மரணப் பட்டியலில்” உள்ளதாக இஸ்ரேல் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, முக்கியத் தலைவர்கள் கூடும் இடத்தில் ஆபத்துகளைத் தவிர்க்க தெஹ்ரான் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டு, ராணுவத்தினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேல், அமெரிக்கா போன்ற வெளிநாடுகள் மட்டுமன்றி, உள்நாட்டுப் பிரிவினைவாத அமைப்புகளாலும் அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலிலும், ஈரானின் முக்கியத் தலைவர்கள் இந்த ஊர்வலங்களில் பொதுவெளியில் பங்கேற்கவுள்ளனர்; இதன் மூலம் தங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அசைக்க முடியாதவை என்பதை உலகிற்கு நிரூபிக்க ஈரான் அரசு முயன்று வருகிறது.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆகஸ்டில் புதுச்சேரியிலுள்ள தனது சொந்த சகோதரர் மரிய கிளோத் வீட்டிற்குள் புகுந்து,…
டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாமல் தவித்து வருகிறது.…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கு நாளுக்கு நாள்…
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஆ.கிருஷ்ணசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனியார்…
முன்னாள் தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை பனையூர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக…