தமிழ் சினிமா ரசிகர்களாக இருப்பவர்கள் ஒரு சிலர் ஏதேனும் ஒரு நேரத்தில், இந்த கோணத்தில் சிந்தித்திருக்க வாய்ப்புண்டு. அதாவது, ஆரம்பத்தில் ரஜினியின் பல படங்களில் வில்லனாக நடித்தவர் சத்யராஜ். ஆனால், ஒரு கட்டத்துக்கு பிறகு சத்யராஜ், ரஜினி படங்களில் நடிப்பது இல்லை. அதுமட்டுமின்றி, கர்நாடகா காவிரி நதிநீர் பிரச்னை ஏற்பட்ட போது, ரஜினியை மேடையில் வைத்துக்கொண்டே, தமிழன், தமிழன் என பேசி, அவரை கடுப்பேற்றியவர் சத்யராஜ் என்பதும் கவனிக்கத்தக்கது. இப்படி ரஜினி, சத்யராஜ் எதிரும் புதிருமாக மாறிப்போனதற்காக காரணங்களை, சினிமா விமர்சகர் செய்யாறு பாலு, ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
சத்யராஜ், சினிமாவில் அறிமுகமாகி சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்துவந்த காலம் அது. அப்போது தம்பிக்கு எந்த ஊரு என்ற படத்தில் சத்யராஜ் ஒரு சிறுவேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் கதாநாயகன் ரஜினிதான். அந்த படத்தில் கதாநாயகி மாதவிதான். சுலக்ஷனாவும் நடித்திருந்தார். அப்போது படப்பிடிப்பு தளத்துக்கு சத்யராஜ் வந்து சென்றுள்ளார். அப்போது அவரிடம் மாதவி, சத்யராஜை பற்றி கேட்டுள்ளார். அதற்கு ரஜினி, இவர் பெரிய நடிகர். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பிலிம் இன்ஸ்டிடியூட் புரபசர் என கூறியிருக்கிறார். அதைக்கேட்ட மாதவி, அடுத்த நா் சத்யராஜிடம் வலியப் போய் நீண்ட நேரம் ஆங்கிலத்தில் பேசி இருக்கிறார். ஆங்கிலம் புரியாமல், பதில் பேசாமல் சத்யராஜ் தவித்திருக்கிறார்.
இதை தூரத்தில் இருந்து பார்த்த சுலக்ஷனா விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார். பின்னர், மாதவி சென்ற பின் சத்யராஜிடம் சென்று, இது ரஜினி பார்த்த வேலைதான் என சொல்லி இருக்கிறார். இதனால், சத்யராஜ் மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார். அதன்பின் மிஸ்டர் பாரத் படத்தில் சத்யராஜ், ரஜினி இணைந்து நடித்தனர். அப்போது படத்தின் நீளம் அதிகமாக இருந்ததால், டைரக்டர் எஸ்பி முத்துராமன், சத்யராஜ் நடித்த காட்சிகளை மட்டும் படத்தில் இருந்து நீக்கியிருக்கிறார்.
இதற்கும் காரணம் ரஜினிதான் என முடிவெடுத்த சத்யராஜ், அதில் இருந்து ரஜினி படங்களில் நடிப்பது இல்லை. இதற்கிடையே கமல் படங்களில் சத்யராஜ், அந்த காலகட்டத்தில் முக்கிய வில்லனாக மாறினார். அவருக்காக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற படத்தை கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனமே தயாரித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகுதான் மேடைகளில், பிரஸ்மீட்களில் ரஜினியை நேரடியாக விமர்சித்து பேசி வருகிறார் சத்யராஜ் என கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.