கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் (சுமார் 981 நாட்கள்) சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடாமல் இருந்த பிரேசில் சூப்பர் ஸ்டார் வீரர் நெய்மர், மீண்டும் தனது தேசிய அணிக்காக களம் இறங்கி சாதனை படைத்துள்ளார். 2023 அக்டோபரில் ஏற்பட்ட கடுமையான முழங்கால் காயம், அதைத்தொடர்ந்து கடந்த மாதம் ஏற்பட்ட தசைநார் காயம் என தொடர் இன்னல்களுக்கு ஆளான நெய்மரின் இந்த கம்பேக் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் குரூப் ‘சி’ பிரிவில் ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் அவர் மாற்று வீரராகக் களம் புகுந்தார்.
மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான போட்டியில், பிரேசில் அணி ஆட்டத்தின் தொடக்கம் முதலே முழு ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 7வது மற்றும் 45வது நிமிடங்களில் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர் அடுத்தடுத்து 2 அபார கோல்களை அடித்து பிரேசில் அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார். தொடர்ந்து இரண்டாவது பாதியில், 60வது நிமிடத்தில் மேதியூஸ் குன்ஹா பிரேசில் அணியின் 3வது கோலை அடித்தார். இதன் மூலம் பிரேசில் அணி 3-0 என்ற பலமான கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
போட்டியின் 76வது நிமிடத்தில் மேதியூஸ் குன்ஹாவிற்கு மாற்றாக 10ஆம் எண் ஜெர்சி அணிந்து நெய்மர் மைதானத்திற்குள் நுழைந்தபோது, மைதானத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி, உற்சாக கோஷம் எழுப்பி அவருக்கு நெகிழ்ச்சியான வரவேற்பு அளித்தனர். கடைசி 15 முதல் 20 நிமிடங்கள் வரை மைதானத்தில் இருந்த நெய்மர், சில அசாத்தியமான பாஸ்களை செய்து ரசிகர்களை மகிழ்வித்தார். அவரது ஒரு பலமான ஷாட்டை ஸ்காட்லாந்து கோல்கீப்பர் அங்கஸ் கன் போராடி தடுத்தார். இறுதியில் பிரேசில் அணி 3-0 என்ற கணக்கில் அசத்தல் வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஆட்டம் முடிவடைந்ததும் மைதானத்திலேயே சக வீரர்களைக் கட்டிப்பிடித்து நெய்மர் கண் கலங்கி தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ஓய்வறைக்குச் சென்று தனியாக அமர்ந்து சில நிமிடங்கள் கண்ணீர் விட்டேன். மீண்டும் எனது நாட்டின் சீருடையை அணிந்து விளையாட கடவுள் எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறுகிறேன். இவ்வளவு காலம் கால்பந்து மைதானத்தை விட்டு தூரமாக இருந்தது நரக வேதனையாக இருந்தது; தற்போது மீண்டு வந்தது நிம்மதி அளிக்கிறது” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ்…
பெங்களூருவில் மாடலிங் கனவோடு இருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இணையவழி கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும்…
பெரம்பூர் தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், தமிழக முதல்வர் விஜய் ஒரு புதிய பிரத்யேக…
தமிழக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பை சந்தித்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மு.க.ஸ்டாலின் அவர்கள்…
மும்பை விமான நிலையத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் அவரது குடும்பத்தினர், விமான நிறுவன…
அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்து வரும் நிலையில், அக்கட்சியின்…