கே பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலமாக ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகும் அவரை மூன்று முடிச்சு மற்றும் அவர்கள் ஆகிய படங்களில் நடிக்கவைத்தார். ஆனால் அனைத்துமே வில்லன் வேடம்தான்.
முதல் முதலாக கலைஞானம்தான் ரஜினியைக் கதாநாயகனாக்கி பைரவி என்ற படத்தைத் தயாரித்தார். ரஜினியை ஹீரோவாக மாற்றியது கலைஞானம் எனில், அவரை ஸ்டாராக மாற்றியது எஸ்.பி.முத்துராமன்தான்.1975 முதல் 80 கள் வரை ரஜினி ஹீரோ, வில்லன் என கலந்துகட்டி நடித்துக்கொடிருந்த போது முத்துராமன்தான் அவரை கமர்ஷியல் அந்தஸ்துள்ள சூப்பர் ஸ்டார் நடிகராக்கினார்.
அவரின் இயக்கத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ரஜினி. ஒருமாதிரி கலைப்படங்களில் நடித்து வந்த ரஜினியை ஜனரஞ்சக கதைகளில் நடிக்க வைத்து ரசிகர்களிடம் பிரபலமாக்கியவர் எஸ்.பி.முத்துராமன்தான். அவரிடம் 12 பேர் கொண்ட ஒரு குழு வேலை செய்து வந்தது. ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட அவர்கள் தொடர்ந்து எஸ்.பி. முத்துரமானின் படங்களில் வேலை செய்து வந்தார்கள்.
ஒருகட்டத்தில் எஸ் பி எம் குழுவில் உள்ளவர்களுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத போது அவர்களுக்காக ஒரு படம் பண்ணித்தர சொல்லி எஸ் பி எம் கேட்டுள்ளார். அப்படி உருவானதுதான் பாண்டியன் திரைப்படம். எஸ்.பி.முத்துராமனின் சொந்த தயாரிப்பில் சம்பளம் இல்லாமல் அந்த படத்தில் நடிப்பது என ரஜினி முடிவு செய்தார். 1992ம் வருடம் அக்டோபர் மாதம் இப்படம் வெளியானது.
இந்த படத்தை முகவும் குறைவான பட்ஜெட்டில் எடுத்து அந்த லாபத்தை தன்னுடன் வேலை செய்தவர்களுக்கு பிரித்து கொடுத்தார் எஸ்.பி.முத்துராமன். இதுவே ரஜினியும் எஸ் பி முத்துராமனும் இணைந்து பணியாற்றிய கடைசி படமாக அமைந்தது. இந்த படம் ஒரு தோல்வி படமாக அமைந்தது என்பதும் துரதிர்ஷ்டமானதுதான். ஆனாலும் இன்றளவும் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருப்பவர் எஸ் பி முத்துராமன் என்பது குறிப்பிடத்தக்கது.