லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “ரன்”. இத்திரைப்படம் வெளிவந்த சமயத்தில் வேற லெவல் ஹிட் அடித்தது.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக அமைந்திருந்தது. மேலும் மாதவனின் கெரியரில் மிகவும் முக்கியமான திரைப்படமாக இது அமைந்தது.
வித்யாசாகரின் இசையில் அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. “காதல் பிசாசே”, “இச்சித்தா” போன்ற பாடல்கள் இன்றைக்கும் இளைஞர்களை கவர்ந்த பாடலாக அமைந்துள்ளது. இப்போதும் இத்திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது ரசித்து பார்ப்பவர்கள் பலர் உண்டு.
இந்த நிலையில் “ரன்” திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது “ரன்” திரைப்படத்திற்கு முதலில் “பிடிச்சிருக்கா?” என்ற டைட்டிலைதான் லிங்குசாமி வைத்திருந்தாராம். இந்த டைட்டிலை இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னத்திடம் லிங்குசாமி கூறியிருக்கிறார்.
அதற்கு ஏ.எம்.ரத்னம், “இந்த டைட்டிலை தயவு செய்து மாத்திடுங்க” என்று கேட்டுக்கொண்டாராம். அதற்கு லிங்குசாமி “ஏன்?” என்ற காரணத்தை கேட்க, அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், “படம் பார்த்து வெளியே வருபவர்கள் ‘பிடிச்சிருக்கா? பிடிக்கலை’ என்று கிண்டல் அடிப்பார்கள். அதனால்தான் டைட்டிலை மாத்திடுங்க” என்று கூறியிருக்கிறார். அதன் பிறகுதான் லிங்குசாமி “ரன்” என்று டைட்டில் வைத்தாராம்.