விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 7வது சீசனாக நடந்து கொண்டிருக்கிறது. என்னதான் பல்வேறு எதிர்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் இந்தாண்டும் வெற்றிகரமாக டி.ஆர்.பியில் பட்டையை கிளப்புகிறது இந்த பிக் பாஸ். இறுதி வாரத்தில் இருக்கும் பிக்பாஸ் சீசன் 7-ல் விஷ்ணு, அல்லது அர்ச்சனா இருவரில் யாராவது ஒருவர் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த சீசனில் பலரால் வெறுக்கப்பட்ட போட்டியாளர்களில் இருவர் மாயா மற்றும் பூர்ணிமா.
யூடியூபில் கண்டெண்ட் வீடியோக்களை வெளிட்டு பிரபலமானவர் பூர்ணிமா. விக்ரம் உட்பட பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரலமானவர் மாயா. இவர்கள் இருவரும் பிக் பாஸ் சீசன் 7-ல் உள்ளே வந்து மிகவும் நெருக்கமானார்கள். அதேப் போல இந்த போட்டியில் இருவரும் சேர்ந்து விளையாடும் விதமாக மற்றவர்களை சிறுமைப்படுத்தவும் தொடங்கினர். குறிப்பாக அர்ச்சனா உள்ளே வந்த அன்றே அவரை கேங்காக ஒன்று சேர்ந்து திட்டித் தீர்த்ததன் மூலம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தனர் இருவரும்.
அதற்கு முன், பிரதீப் ஆண்டனியை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத முறையில் நடந்துக் கொள்வதாக கூறி, உரிமைக் குரல் கொடுத்து அவர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்கள் பூர்ணிமாவும், மாயாவும். இதன் மூலமும் இவர்களது பெயர் வெளியே மோசமானது. இவர்களது இந்த நட்பினை பிரிப்பதற்கு பலரும் பல அறிவுரைகளும் கூறினாலும் கூட அவர்கள் பிரிவதாய் இல்லை. ஆனால் அதற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அது மட்டும் நடந்திருந்தால், ஒட்டு மொத்த பிக்பாஸின் கதையே வேறு மாதிரி இருந்திருக்கும்.
இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் எழுத்தாளர் பவா செல்லதுரை. சிறுகதை எழுத்தாளர், பதிப்பாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், நடிகர் என பண்முகத் தன்மைக் கொண்டவர். பிக்பாஸ் சீசன் 7-ல் கலந்து கொண்ட பவா செல்லதுரை, பல்வேறு கதைகளை தினந்தோறும் போட்டியாளர்களுக்கு கூறுவார். 8-வது நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் தன்னால் இருக்க முடியாது எனவும், உடல்நிலையை கருத்தில் கொண்டும் வெளியேறினார். ஒருவேளை அந்த வாரம் அவர் தாக்கு பிடித்திருந்தால், வார இறுதியில் வாக்குகளின் அடிப்படையில் மாயா தான் வெளியேற்றப்படும் நபர் பட்டியலில் இருந்திருந்தார். பவா செல்லதுரை வெளியேறாமல் இருந்திருந்தால், அந்த வாரம் மாயா தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பார். அப்படி அவர் வெளியேறி இருந்தால் பூர்ணிமாவின் பெயரும் பாதிப்படைந்திருக்காது.