ஒரு படத்தின் இதயம் என்பது அப்படத்தின் இயக்குநர் தான் எனலாம். கதை நன்றாக இருந்தால் தான், அப்படம் மக்களிடம் பேசப்படும். அதற்கு இயக்குநரின் எழுத்தும், அதனை திரைக்கதையாக்கும் திறனும் தான் அதற்கு பேருதவியாக இருக்கும். அப்படியிருக்க, சில சயமங்களில் இயக்குநர்களின் கதையில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சில திருத்தங்களை மேற்கொள்வார்கள். சில இயக்குநர்கள் அதனை திருத்திக் கொள்வர். சிலர் அதனை ஏற்க மாட்டார்கள். இதன் மூலம் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் ஹீரோ, இயக்குநர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, பாதியிலேயே நின்று போன படங்கள் ஏராளாம்.
இப்படிப்பட்ட தகராறுகளுக்கு மத்தியில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கும், சரத்குமாருக்கும் இடையே வேறு விதமாக மனக்கசப்பு ஏற்பட்டு இருக்கிறது. 90ஸ் ஆண்டு காலகட்டத்தில் பல கமர்ஷியல் படங்களை கொடுத்து வெற்றி இயக்குநராக வலம் வந்தவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். அதேப் போல கட்டுமஸ்தான உடற்கட்டோடு அனைத்து கெட்டப்புகளுக்கு ஒத்து போவது போல் நடித்து வந்தவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். இவர்கள் இருவரும் இணைந்து 10 படங்கள் ஒன்றாக பணியாற்றியுள்ளனர்.
முதன் முதலாக இந்தக் கூட்டணி புரியாத புதிர் படம் மூலம் இணைந்தது. 1990-ல் வெளியான இப்படத்தின் படப்படிப்பின் போது இவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது படத்தில் ஒரே நாளில் ஒரு சண்டைக் காட்சி எடுக்க வேண்டும் என்பதற்காக சரத்குமாரை மாலை 6 மணியளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வரக் கூறியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால் சரத்குமாரோ குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை. அதனால் சண்டைக் காட்சிகளை டூப் வைத்து எடுத்துக் கொண்டிருக்க, இரவு 2 மணியளவில் தான் சரத்குமார் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார்.
அவர் வரவே தேவையில்லை, சண்டைக் காட்சிகளை டூப்பை வைத்தே முடித்துக் கொள்வதாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு புறம் சத்தம் போட, வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட டென்சனால் சரத்குமார் ஒருபுறம் சத்தமிட, பிறகு இருவரும் சமாதானம் ஆகி, படப்பிடிப்பு முடிந்துள்ளது. பிறகு இயக்குநரை, சரத்குமார் தனது காரிலேயே அழைத்துக் கொண்டு அவரது வீட்டில் விட்டுள்ளார். அப்போதிலிருந்து தான் இருவரும் நண்பர்களாகினார்களாம். இதனை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.