தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பெண்களை மையப்படுத்தி அதிகளவு திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதன்படி பெண்களை மையமாகக் கொண்ட கதை களத்துடன் கண்ணகி என்ற திரைப்படம் இன்று வெளியானது. அறிமுக இயக்குனர் யஸ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா, மயில்சாமி மற்றும் மௌனிகா உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நான்கு வெவ்வேறு காலகட்டங்களில் இருக்கும் பெண்கள் ஒரு மையப்புள்ளியில் சந்திப்பதை இந்த திரைப்படம் கதையாக கொண்டுள்ளது.
அதாவது திருமணத்திற்காக காத்திருக்கும் அம்மு அபிராமி, திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் லிவிங் வாழ்க்கையில் இருக்கும் ஷாலின் ஜோயா, காதலனால் கர்ப்பமாகும் கீர்த்தி பாண்டியன், விவாகரத்து கேட்கும் கணவருடன் இணைந்து வாழ விரும்பும் வித்யா என இந்த நான்கு பெண்களின் கதையும் ஒரே இடத்தில் வந்து நிற்கின்றது. இந்த பிரச்சனைகளில் சம்பந்தப்பட்ட பெண்கள் அனைவரும் எப்படி அதனை எதிர்கொள்கிறார்கள் என்பதை ஒரு ஆணாக திரைப்படம் மூலம் விளக்கி இருக்கும் இயக்குனரை கட்டாயம் இந்த இடத்தில் பாராட்டியே ஆக வேண்டும்.
அதாவது பெண்ணின் வலிகளை ஒரு ஆணின் பார்வையில் இந்த அளவிற்கு கடத்த முடியுமா என்ற இந்த திரைப்படம் ஆச்சரியத்தை அளிக்கிறது. இதில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்துள்ளனர். ஆனால் படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் என்பதால் சிறு சோர்வும் ஏற்படுகின்றது. அதனைப் போலவே பாடல்களும் பெரிய அளவிற்கு ஈர்க்கவில்லை. இருந்தாலும் பெண்களின் அழுத்தமான கதையோடு வெளியாக்கியுள்ள இந்த திரைப்படம் குறைந்தபட்சம் பார்வையாளர்களுக்கு நான்கு நாள் தாக்கத்தையாவது அளிக்கும். அதனைப் போலவே சில விவாதங்களுக்கும் இந்த திரைப்படம் வழிவகுக்கும். அந்த அளவிற்கு திரைப்பட வசனங்கள் உள்ளன.