“யாரும் பயப்படாதீங்க…” நடுக்காட்டில் சிக்கிய படக்குழு… தனியாளாக களத்தில் இறங்கி சம்பவம் செய்த நடிகையர் திலகம்…

By Begam

Published on:

1950, 60 மற்றும் 70களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகை சாவித்ரி. இவர்  1936ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி ஆந்திராவில் பிறந்தவர்.  1952ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அடி எடுத்து வைத்த அவர் தமிழ், கன்னடம், இந்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார். நடிகையர் திலகம் பட்டம் பெற்றவர்.  ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். நடிகர் திலகம் என்று போற்றப்பட்ட சிவாஜி கணேசனே சாவித்ரியின் நடிப்பை பார்த்து மிரண்டு பயந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

   

உச்ச நடிகையாக இருந்த சாவித்ரி காதல் மன்னன் ஜெமினி கணேசனை காதலித்து மணந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். சென்னையில் நீச்சல் குளத்துடன் பெரிய பங்களா கட்டிய முதல் நடிகை சாவித்ரி தான். கஷ்டம் ஏழைக் குடும்பத்தில் பிறந்து நடித்து சம்பாதித்து செல்வச் சீமாட்டியாக வாழ்ந்த அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து கடைசிக் காலத்தில் வறுமையில் வாடி இறந்தார். சிவாஜியும், சாவித்ரியும் சேர்ந்து நடித்த பாச மலர் படம் காலத்தால் அழியாத காவியம் என்றே கூறலாம்.

எம்.ஜி.ஆரை போலவே தன்னிடம் இருந்ததை பலருக்கும் சாவித்ரி வாரி வழங்கும் குணம் கொண்டவராக இருந்தார். தற்பொழுது அவரின் வள்ளல் குணம் தொடர்பான ஒரு சம்பவம் இணையத்தில் வெளிவந்துள்ளது. அதாவது ஒருமுறை படப்பிடிப்புக்காக இரவு நேரத்தில் மைசூரின் ஒரு காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு குழுவினருடன் காட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தார் சாவித்ரி. அப்போது காட்டு யானைகள் அவர்களின் வாகனங்களை வழி மறித்தன. எனவே, காரை பின்னால் ஓட்டி சென்று தப்பித்தனர். அப்போதுதான் அங்கு வேறொரு ஆபத்து காத்திருந்தது.

கொள்ளையர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர். உடனே, ‘யாரும் பயப்பட வேண்டாம்’ என சொல்லிவிட்டு காரிலிருந்து இறங்கிய சாவித்ரி ‘நான் ஒரு நடிகை. படப்பிடிப்புக்காக போய் கொண்டிருக்கிறேன். இப்போது எங்களிடம் 5 ஆயிரம் மட்டுமே இருக்கிறது’ என சொல்லி அந்த பணத்தை அவர்களிடம் கொடுத்தார். அப்போது யானை பிரச்சனையை புரிந்து கொண்ட கொள்ளையர்கள் பல கிலோ மீட்டர்கள் படப்பிடிப்பு வாகனங்களுக்கு துணையாக வந்து பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். இப்படி நடுக்காட்டில் சிக்கிய படக்குழுவை தனியாளாக களத்தில் இறங்கி  யானை கூட்டத்திடமிருந்தும், கொள்ளையர்கள் கூட்டத்திடமிருந்திருந்தும் சமயோஜிதமாக யோசித்து காப்பாற்றியுள்ளார் இந்த வீரப்பெண்மணி.