தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த பிளஸ்-2 பள்ளி மாணவி ஒருவர், தாயை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், சாத்தான்குளம் அருகே உள்ள ஆத்திக்காடு பகுதியைச் சேர்ந்த பெயிண்டர்களான சஞ்சய் (19), உபேஷ் தர்மா (21), மற்றும் முத்தரசன் (18) ஆகிய மூவருக்கும் மாணவியின் தந்தையுடன் தொழில் ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றபோது, மாணவியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது சஞ்சய் மற்றும் மாணவிக்கு இடையே காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சஞ்சய் அம்மாணவியை ஆத்திக்காடு பகுதிக்கு அழைத்துள்ளார். அவரது பேச்சை நம்பி, முத்தரசன் என்பவரின் இருசக்கர வாகனத்தில் அம்மாணவி ஆத்திக்காடு பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு சஞ்சய், உபேஷ் தர்மா மற்றும் முத்தரசன் ஆகிய மூவரும் சேர்ந்து மாணவியை கருமேனி ஆற்றங்கரையோரம் உள்ள புதர் பகுதிக்கு அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அலறியதை அடுத்து, சத்தம் கேட்டு அங்கு விரைந்த அப்பகுதி பொதுமக்கள், தப்பியோட முயன்ற மூவரையும் மடக்கிப் பிடித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சகாய சாந்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், காதலிப்பதாகக் கூறி தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று நண்பர்களுடன் தவறாக நடக்க முயன்றது உறுதியானது. பாதிக்கப்பட்ட மாணவி சிறுமி என்பதால், சஞ்சய், உபேஷ் தர்மா, முத்தரசன் ஆகிய மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
