கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது கூறியதாவது, நாங்கள் கரூர் செல்ல முயற்சி செய்தோம். இரவு 3:30 மணி வரை அங்கேயே காத்திருந்தோம்.
ஆனால் எங்களுக்கு அனுமதி தரவில்லை. அனைத்து சாலைகளையும் தடை செய்தனர். தமிழக வெற்றி கழக கொடி கட்டிய வாகனங்களை போலீசார் கரூர் மாவட்டத்திற்குள் அனுமதிக்கவே இல்லை. சொல்லப் போனால் தொண்டர்கள், நிர்வாகிகள் அடித்து வெளியேற்றப்பட்டார்கள். அதன் பிறகு நடந்த நாடகத்தை அனைவரும் பார்த்திருப்பார்கள். அமைச்சர்கள் நடத்திய நாடகத்தை பார்த்திருப்பீர்கள்.
உடனடியாக பிரேத பரிசோதனையும் செய்து விட்டார்கள் என்று தெரிந்த பெண் எங்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது என தெரிந்து விட்டது. எங்கள் முதல் குற்றச்சாட்டு காவல்துறை மீது தான். இதனால் தான் உடனடியாக நீதிமன்றத்தை நாடினோம். தமிழக வெற்றி கழகத்தை முடக்க வேண்டும் என நினைத்தார்கள். மக்கள் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எங்களுக்கு 41 பேர் உயிரிழந்தது மட்டுமே துக்கமாக உள்ளது. அது மீள முடியாத துக்கம். எங்களுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது. தமிழக வெற்றிக்கழகத்தின் தொய்வு ஏற்படவில்லை. இதனை விட பெரிய நெருக்கடியை சந்திப்போம் என கூறியுள்ளார்.
