தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்கள் வரிசையில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜீத்குமார். மற்ற நடிகர்களை காட்டிலும் அஜீத் வித்யாசமானவர். ரசிகர்களை மன்றங்களை கலைத்து விட்டார். ரசிகர்கள் தனக்கு தந்த தல என்ற பட்டத்தையும் மறுத்துவிட்டார். அல்ட்டிமேட் ஸ்டார் என்று அவர் நடிக்கும் படத்தின் டைட்டிலிலும் போட அனுமதி மறுத்துவிட்டார். அஜீத்குமார் அல்லது ஏகே என்றுதான் அவரை அழைக்க அனுமதிக்கிறார். அதே போல் அவரது தோற்றத்தில் சினிமாவுக்காக எந்த மாறுதலையும் அவர் செய்ய விரும்புவதில்லை. எப்படி இயல்பாக இருக்கிறாரோ அதேபோன்ற வெள்ளை தாடி, வெள்ளை தலைமுடி என கேஷூவலாக மட்டுமே பொது இடங்களில் காட்சி தருகிறார்.
சமீபத்தில் இதுகுறித்து ஒரு நேர்காணலில் சினிமா விமர்சகர் சுபேர் கூறியதாவது, அஜீத்குமாருக்கு சினிமா மீதான ஆர்வம் குறைந்துவிட்டது. அவர் நிறைய புகழ் பார்த்துவிட்டார். நிறைய பணமும் பார்த்துவிட்டார். பணம், புகழ் மீதெல்லாம் அவருக்கு இருந்த ஆர்வம், ஆசை எல்லாம் போய்விட்டது. இப்போது அவர் சுதந்திரமான ஒரு வாழ்க்கையை வாழ விரும்புகிறார். அதனால்தான் ஒரு வருஷத்தில் ஆறு மாதங்கள் அவர் வெளிநாடுகளில் இருக்கிறார். மீதி ஆறு மாதங்கள்தான் தமிழ்நாட்டில் இருக்கிறார். எங்கும் சுதந்திரமாக போய்வர முடியாத சூழலில் தமிழ்நாட்டு வாழ்க்கையை அவர் விரும்பவில்லை.
அவர் தனக்கான ஒரு வாழ்க்கையை வாழ விரும்புகிறார். துபாயில் அவருக்கு வீடு இருக்கிறது. அங்கு அலுவலகமும் திறந்திருக்கிறார். டிராவல், டூரிஸம், டிரக்கிங் மாதிரியான துறைகளில் பிஸினஸ் செய்ய அவர் விரும்புகிறார். சினிமா சாராத ஒரு மாறுபட்ட வாழ்க்கையை வாழ அவர் ஆசைப்படுகிறார். அதனால் அஜீத்குமார் இன்னும் ஒரு 5 ஆண்டுகள், அதிகபட்சமாக சினிமாவில் நீடித்திருக்க வாய்ப்புள்ளது. அதன்பிறகு அவர் சினிமாவில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டு, சினிமாவை விட்டே விலகி சென்றுவிடுவார். ஏனெனில் இன்னும் எத்தனை நாட்களுக்கு சண்டை காட்சிகள், காதல் காட்சிகள் என கேமரா முன் நடிப்பது என அவருக்கு போரடித்து விட்டது. அதனால் அவர் சினிமாவில் அதிக காலம் நீடித்திருக்க மாட்டார் என்று கூறியிருக்கிறார். இது அஜீத் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.