எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என்ற இருபெரும் ‘மாஸ்’ ஆளுமைகளின் மக்கள் செல்வாக்கினால், பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலை ஆட்டிப்படைத்த அதிமுக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வரலாறுகாணாத உள்கட்சிப் பூசலையும், தத்தளிப்பையும் சந்தித்து வருகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலாவின் ஆதரவோடு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் ஓபிஎஸ்ஸுடன் கைகோர்த்துச் சசிகலாவையே கட்சியை விட்டு ஓரங்கட்டினார். அதன் பின் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்த அவர் எடுத்த பல அதிரடி முடிவுகள், இன்று அதிமுகவை தொடர்ந்து 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர வைக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளதுடன், கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
அதிமுக சந்தித்த சரிவுகளுக்கு முதன்மைக் காரணம், கட்சியின் பாரம்பரிய வாக்கு வங்கியாக இருந்த தென் மாவட்ட முக்குலத்தோர் சமூகத் தலைமைகளைப் புறக்கணித்ததுதான். கட்சியின் அசைக்க முடியாத இரும்புக்கோட்டையாக விளங்கிய இப்பகுதியிலிருந்து ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் போன்ற முக்கிய முகங்களை ஈபிஎஸ் நீக்கியது தென் மண்டலத்தில் மிகப் பெரிய விரிசலை ஏற்படுத்தியது. கட்சியின் அதிகாரம் தென் மாவட்டங்களிலிருந்து மாறி, ஈபிஎஸின் சொந்தச் சமூகமான கொங்கு மண்டலக் கவுண்டர் சமூகத் தலைவர்களின் கைகளுக்குச் சென்றது. தொடர் தோல்விகளுக்குப் பிறகும், சாதாரணத் தொண்டர்களாகக் கூட அவர்களை மீண்டும் சேர்க்க ஈபிஎஸ் மறுத்ததால், தென் மாவட்ட வாக்குகள் அடியோடு சிதறி, அதிமுக தனது வரலாற்றிலேயே முதன்முறையாகத் தொடர்ந்து இருமுறை ஆட்சியைப் பிடிக்க முடியாமல் தவிக்கிறது.
இரண்டாவதாக, ஜெயலலிதா தனது இறுதிக்காலத்தில் பாஜகவை தள்ளி வைத்தே அரசியல் செய்த நிலையில், ஈபிஎஸ் தொடர்ந்து டெல்லிக்குச் சாதகமான போக்கைக் கடைப்பிடித்தது அக்கட்சிக்கு நஷ்டத்தையே தந்தது. இது அதிமுகவின் பாரம்பரிய சிறுபான்மையின வாக்கு வங்கியை அடியோடு துடைத்து எறிந்தது. மேலும், 2026 தேர்தலுக்கு முன்பாக தவெக தலைவர் விஜய், அதிமுகவை நேரடியாகத் தாக்காமல் தவிர்த்து வந்ததால் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஈபிஎஸ் பாஜக பக்கமே சாய்ந்தார். தேர்தல் முடிவுகளில் விஜய் 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பிறகும், அவருடன் ‘பவர் ஷேரிங்’ கூட்டணி அமைக்கப் பல அதிமுக எம்எல்ஏக்கள் விரும்பினர். ஆனால், ஈபிஎஸ் திமுகவிடம் வெளியிலிருந்து ஆதரவு பெற்று திராவிடக் கூட்டணி அமைக்க முயன்று தோற்றார். இதனால் விஜய், காங்கிரஸ், விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுடன் கைகோர்த்து ஆட்சியை அமைத்தார்.
“கடைக்கோடி தொண்டனும் கட்சியின் உச்சப் பதவிக்கு வரலாம்” என்ற எம்ஜிஆரின் அடிப்படை விதியை மாற்றி, அனைத்து அதிகாரங்களையும் தனக்குள்ளேயே குவித்துக்கொண்ட ஈபிஎஸின் செயல்பாடு கட்சியின் ஜனநாயகத் தன்மையைக் குலைத்துவிட்டது. இதன் உச்சகட்டமாக, தவெக அரசுக்கு எதிராகச் சட்டசபையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது, அதிமுகவின் 47 எம்எல்ஏக்களில் 25 பேர் ஈபிஎஸின் கொறடா உத்தரவை மீறி விஜய்யின் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். துணிச்சலாக அவர்களை நீக்கக்கூட முடியாத நிலையில் உள்ள ஈபிஎஸ், அவர்களின் கட்சி பதவியை மட்டுமே பறித்துள்ளார். எம்ஜிஆராலும் ஜெயலலிதாவாலும் கட்டிக்காக்கப்பட்ட ஒரு மாபெரும் இயக்கம், எடப்பாடி பழனிசாமியின் தவறான அரசியல் நகர்வுகளால் இன்று தனது சுய முகவரியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சி தொண்டர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட முந்தைய பகை, இன்று ஒரு கொடூரமான…
திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கில் சதை வளர்ச்சிக்கான சிகிச்சையின் போது நர்சிங் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவம், மருத்துவ வட்டாரத்திலும்…
தமிழக அரசியலில் தற்போதைய சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்கள் பதவிகளை…
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியில் காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய்…
தமிழ் திரையுலகில் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், எமோஷனல் உணர்வுகளையும் தத்ரூபமாகப் படம்பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர்…
அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்பி…