தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளவர்கள் சிலர் மட்டுமே. அப்படி இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து 27 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு நடிகை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் என்றால் அது நடிகை சில்க் ஸ்மிதா மட்டும்தான். ஒட்டுமொத்த திரை உலகத்தையும் தனக்கு அடிமையாக கட்டி போட்டவர். அதனால் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி கூட இவர் யார் என்று கேட்டுள்ளார். இதுவே இவரின் வெற்றிக்கான அடையாளம். போதை ஏற்றும் கண்கள், அசர வைக்கக்கூடிய நடனம் என கவர்ச்சியில் வித்தியாசத்தை காட்டி தன்னுடைய நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகளில் சுமார் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் இவரின் நடனம் இடம்பெறாத ஒரு திரைப்படத்தை கூட பார்க்க முடியாது. இப்படி புகழின் உச்சத்தில் இருந்து அனைவராலும் கொண்டாடப்பட்ட இவருக்கு மற்றொரு முகமும் உள்ளது. அதாவது இவர் மிகவும் இரக்ககுணம் கொண்டவர். தனக்கான ஒரு சுதந்திர வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்பியவர். தான் பிறந்த ஊரில் கஷ்டப்படும் மக்களுக்கு இவர் அள்ளி அள்ளி பணத்தை கொடுத்து உதவியும் செய்துள்ளார்.
ஆந்திராவில் பண்ணையாளர்களுக்கு எதிராக போராடிய மக்களுக்கும் இப்படி நிவாரண நிதியை வாரி வழங்கியுள்ளார். தான் சம்பாதித்த பணத்தை திரையுலக தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் தர்மம் செய்து வாழ்ந்து வந்தார். இவரிடம் உதவி என்று யார் கேட்டு வந்தாலும் தயங்காமல் செய்துவிடும் பெரிய உள்ளம் கொண்டவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. இப்படி நடிப்பு திறமையும் மறுபக்கம் ஏழைகளுக்கு உதவும் இறக்க குணமும் கொண்ட இவர் உச்சகட்ட மன அழுத்தத்தில் தன்னுடைய இறுதி முடிவை தேடியது காலத்தின் கொடுமை. அவர் மரணத்திற்குப் பிறகு அவர் மறைந்தாலும் அவரது பெயர் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.