70ஸ், 80ஸ் ரசிகர்களின் கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை பிரமிளா. தமிழ்த்திரையுலகில் கதாநாயகி, குணச்சித்திர நடிகை, வில்லி என பன்முகத்திறன் கொண்டவர். இளமைப்பொலிவும், துள்ளலான துறுதுறுப்பும், குறும்புத்தனமும் வசீகர சிரிப்பும் கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பன்மொழிப்படங்களில் நடித்தார். நாடகம், நாட்டியம், கலைத்துறையில் புகழ் பெற்றவர். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகை பிரமிளா. அவர் இணைந்து நடிக்காத கதாநாயகர்களே இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
அதே மாதிரி அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட நடிகை பிரமிளா எப்படி இந்த சினிமா உலகத்துக்குள்ள வந்தாங்க தெரியுமா…? வாங்க அதைப்பத்தி இந்த தொகுப்பில் நாம் விரிவாக பார்க்கலாம். சினிமாவில் நடிப்பது பற்றி எந்த ஒரு சிந்தனையும் இல்லாத நடிகை பிரமிளா, ஒரு காலகட்டத்தில் தனது தந்தையின் வியாபார விஷயத்திற்காக சென்னைக்கு வந்த அவர் பாக்னி ஸ்டூடியோவில் சுற்றிப் பார்ப்பதற்காக சென்றிருக்கிறார். அப்பொழுது அங்கிருந்த கதிர் சம்பந்தம் என்பவர்தான் முதன் முதலாக பிரமிளாவை பார்த்துவிட்டு ‘ரொம்ப அழகா இருக்கீங்க. நீங்க சினிமாவுல நடிக்கலாமே’ என்று கேட்டிருக்கிறார். அதுவரைக்கும் பிரமிளாவிற்கு சினிமாவில் நடிப்பதை பற்றிய சிந்தனையே இல்லையாம்.
அதற்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய அவர் தனது தந்தையிடம், ‘நான் ஏன் சினிமாவில் நடிக்க கூடாது ?’ என்று கேள்வி கேட்டாராம். ‘வாய்ப்பு கிடைத்தால் நடிக்கலாம்’ என்று அவரது தந்தையும் சம்மதித்தாராம். இதைத் தொடர்ந்து பிரமிளாவின் புகைப்படம் ஒரு சில தயாரிப்பாளர்களிடம் கிடைக்க, அவர்களிடமிருந்து நடிக்க அழைப்புகள் வந்தது. அப்படி நடிகை பிரமிளா நடித்த முதல் திரைப்படம் தான், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் சகோதரரான எம் ஜி சக்கரபாணி அவர்களின் ‘மீனம்மா மகன்’.
இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக 120 ருபாய் முன்பணம் கொடுத்து பிரமிளா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து எல் கே ஃபிலிம் கம்பெனி என்ற நிறுவனம்120 ரூபாய் பணம் கொடுத்து பிரமிளாவை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் இந்த இரண்டு படங்களும் வெளியாகவில்லை. படப்பிடிப்பும் நடக்கவில்லை. இதை தொடர்ந்து மூன்று மலையாள படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார் பிரமிளா. அதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு கற்பகம் ஸ்டூடியோவில் நடைபெற்ற பொழுது தான், பிரமிளாவை கே எஸ் கோபாலகிருஷ்ணன் தற்செயலாக பார்த்தார் .அவர் அன்னைக்கு பார்த்ததன் விளைவு தான் ‘வாழையடி வாழை’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு பிரமிளாவிற்கு கிடைத்தது. பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் திரைப்படங்களாக அமைந்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார்.