லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கோபி நயினார். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் அண்ட்ரியா நடிக்கும் ‘மனுசி’ என்ற படத்தை இயக்குகிறார்.
அறம் படத்தை போன்று மனுஷி படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. சமீபத்தில் மனுஷி படத்தின் டிரைலர் வீடியோவும் வெளியாகி வைரலானது. இந்த டிரைலரை பார்க்கும்போது சமூகப் பிரச்சினைகளை பேசும் கதையாக மனுஷி அமைந்திருப்பதாக தெரிகிறது. இத்திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் கோபி நயினாரிடம், ‘அறம் படத்தின் வெற்றிக்குப் பிறகு கூட எந்த ஒரு பெரிய ஹீரோவும் உங்களிடம் கதை கேட்கவில்லையா..? என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அவர், ‘ முன்னணி நடிகர்கள் தன்னை கண்டுக்கவே இல்லை என்றும் ஹீரோயின்கள் தான் மதித்து வாய்ப்பு கொடுக்கின்றனர்’ என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்பொழுது, ‘சினிமாவில் நல்ல கதைகளை வைத்துக்கொண்டு நல்ல படங்களை இயக்குபவர்கள் ஹீரோக்கள் அழைத்து கதை கேட்பதில்லை. அதற்கு பதிலாக யாரை வளர்த்து விட வேண்டும் என்கிற நோக்கத்தில் மட்டுமே இங்கே சினிமா இயங்கிக் கொண்டிருக்கிறது ‘ என்ற குற்றச்சாட்டையும் தமிழ் சினிமா மீது வைத்துள்ளார் கோபி நயினார்.