நடிகர் ஜூனியர் பாலையா, பழம்பெரும் நடிகர் டிஎஸ் பாலையாவின் மூன்றாவது மகன். ரகு என்பது இவரது சொந்த பெயர். தந்தை பாலையா போலவே இருந்நதால், ஜூனியர் பாலையா என சினிமாவில் அழைக்கப்பட்டு, அதுவே நிரந்தரமாகி விட்டது. தந்தை டிஎஸ் பாலையா காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மிகச்சிறந்த குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக பெயர் பெற்றவர்.கோபுர வாசலிலே, கரகாட்டக்காரன், ராசுக்குட்டி, சுந்தரகாண்டம், வேட்டிய மடிச்சுக்கட்டு, சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்த ஜூனியர் பாலையா, சில மாதங்களுக்கு முன், கட்டிலில் இருந்து கீழே விழுந்து அடிபட்டு இருக்கிறார். 70 வயதான நிலையில், வளர்ந்த மகன், மகள், மனைவி உள்ள நிலையில், வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில்தான் வாழ்ந்திருக்கின்றனர். உடல் நலமின்றி, படங்களில் நடிக்க வாய்ப்புமின்றி, மருத்துவ செலவுக்கு கூட வழியின்றி தவித்திருக்கிறார் ஜூனியர் பாலையா.நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், ஜூனியர் பாலையா உயிர் பிரிந்திருக்கிறது. பாடகர் எஸ்என் சுரேந்தர், நடிகர்கள் செம்புலி ஜெகன், கோவை சரளா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். டிஎஸ் பாலையா என்ற புகழ் பெற்ற பழம்பெரும் நடிகரின் மகன், சாட்டை போன்ற பல நல்ல படங்களில் நடித்த ஜூனியர் பாலையா, சொந்த வீடு கூட இல்லாமல், மருத்துவ செலவுக்கு கூட வழியின்றி கடைசி காலத்தில், முதுமையில் வாடகை வீட்டில் கஷ்டப்பட்டு இருக்கிறார்.
ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கம் போன்றவை இருந்தும், அந்த அமைப்பால், அதன் நிர்வாகிகளால் இந்த சிறந்த நடிகரை காப்பாற்றவோ, உதவவோ எந்த முயற்சியும் செய்யவில்லை. உதவுவும் முன்வரவில்லை என்பதுதான் கொடுமை.