ஹீரோவாதான் நடிப்பேன் என வாய்ப்புகளைக் கெடுத்துக் கொண்ட கவுண்டமணி… உண்மையை சொல்லி மீண்டும் காமெடியனாக்கிய இயக்குனர்!

By vinoth

Published on:

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.

16 வயதினிலே திரைப்படம் பெரிய ஹிட்டானதும் அடுத்தடுத்து அவருக்கான வாய்ப்புகள் உருவாகி, 80 களில் 90 களில் அவர் உச்ச நடிகரானார்.  80 களில் அவர் மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தபோது அவருக்குக் கதாநாயகனாக நடிக்க சில படங்களில் வாய்ப்புகள் வந்தன. பிறந்தேன் வளர்ந்தேன் போன்ற சில படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

   

ஆனால் அந்த படங்கள் எல்லாம் வெற்றி படங்களாக அமையவில்லை. ஆனாலும் விடாப்பிடியாக கவுண்டமணி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடித்துள்ளார். அதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறையும் சூழல் உருவானது.

இந்த நிலையில் கவுண்டமணீக்கு நெருக்கமான இயக்குனரான கங்கை அமரன் அவரை சமாதானப்படுத்தி கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்களில் காமெடி வேடத்தில் நடிக்க வைத்துள்ளார். அந்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கவுண்டமணி இனிமேல் ஹீரோ வேடமே வேண்டாம் நமக்கு காமெடியே போதும் என செகண்ட் இன்னிங்ஸில் பட்டையக் கிளப்பினார்.

அப்படி தொடங்கிய செகண்ட் இன்னிங்ஸ் 10 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து 2000களின் தொடக்கம் வரை அவர் முன்னணி நடிகராக வலம் வந்தார். அதன் பின்னர் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக அவர் சினிமாவில் இருந்து விலகினார். இப்போது தன்னுடைய 72 ஆவது வயதில் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.