கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி சோகத்தில் முடிந்துள்ளது. குழந்தைகள் பயணித்த மாருதி ஜிப்சி காரை, மணற்பரப்பில் அதிவேகமாகவும் அபாயகரமாகவும் திருப்பி ‘ட்ரிஃப்ட்’ செய்தபோது, எதிர்பாராதவிதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தின்போது காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 14 வயது சிறுவன், கவிழ்ந்த வாகனத்தின் அடியில் பலமாகச் சிக்கிக்கொண்டான். தகவலறிந்து வந்த உள்ளூர் மக்களும் அதிகாரிகளும் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு சிறுவனை மீட்க முயன்றபோதிலும், பலத்த காயமடைந்த அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
https://twitter.com/rajtweets10/status/2100636250428624980/video/1
சமூக வலைதளப் புகழுக்காகவும் லைக்ஸ்களுக்காகவும் இளைஞர்கள் மேற்கொள்ளும் இதுபோன்ற பொறுப்பற்ற சாகசச் செயல்கள், உயிர்பலியை வாங்கும் பெரும் ஆபத்தாக மாறிவருவதை இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்குக் காரணமான வாகன ஓட்டுநர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
