ஃபதேபூரைச் சேர்ந்த ஷாலினி, பெற்றோரைக் சம்மதிக்க வைத்துத் தான் காதலித்த திலீப் குமார் யாதவ் என்ற அரசு ஆசிரியரை 2017-இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குத் தர்ஷித் என்ற மகனும் உள்ளார். ஆனால், சில நாட்களுக்கு முன் ஆகஸ்ட் 7 அன்று, ஷாலினி தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். “எனது மகள் அவனையே உயிருக்கு உயிராகக் காதலித்தால், அவளுக்காகத் தான் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வாடகை வீட்டிற்கு வந்தோம்; ஆனால் அவன்தான் என் மகளைக் கொன்ற கொடூரன்” என ஷாலினியின் தாய் பூல்மதி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
ஷாலினி குளியலறை தொட்டியில் தவறி விழுந்து காயம் அடைந்ததாகத் திலீப் கூறிய போதிலும், அவரது குடும்பத்தினர் வீட்டிற்குச் சென்றபோது ஷாலினியின் சடலம் தரையில் கிடந்தது. உடலின் பின்புறத்தில் 3 ஆழமான வெட்டுக்காயங்கள் உட்பட மொத்தம் 7 காயங்கள் இருந்தன. சம்பவத்திற்கு முன்பாக வீட்டைக் கழுவிச் சுத்தம் செய்ததும், இரத்தக் கறை படிந்த துணிகளை மறைத்ததும், ‘பாம்பு இருக்கிறது’ எனப் போலி அழைப்பு விடுத்துத் திசைதிருப்ப முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், திலீப் காலை நடைப்பயிற்சி சென்றதாகக் கூறிய வழியும், சிசிடிவி காட்சிகளில் அவர் இருசக்கர வாகனத்தில் சென்ற வழியும் முரண்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஷாலினி நீரில் மூழ்கியதால் தான் இறந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், கூர்மையான ஆயுதத்தால் முதலில் அவரைத் தாக்கிவிட்டு, பின்னர் குளியலறைத் தொட்டி நீரில் மூழ்கடித்துக் கொலை செய்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், திலீப்பைக் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் அவரது இரு சகோதரர்களையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
