காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் நேர்ந்த கொடூரம்… 20 லட்சம் வரதட்சணைக்காக பறிபோன இளம் பெண்ணின் உயிர்… டெல்லியை உலுக்கிய மர்ம மரணம்…!

By Visaka on ஆடி 6, 2026

Spread the love

டெல்லியில் திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் ஆக்ரிதி (28) என்ற இளம் பெண், லோதி காலனியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியின் புஷ் விகார் பகுதியைச் சேர்ந்த ஆக்ரிதி, தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். அவர் அர்ஷத் சிக்ஹா என்ற வாலிபரை கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை கணவர் வீட்டில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கட்டடத்தின் கீழே அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

ஆக்ரிதி தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் குடும்பத்தினர் தரப்பில் கூறப்பட்டாலும், அவரது மரணத்தில் பெரும் மர்மம் இருப்பதாக போலீசார் கருதுகின்றனர். சம்பவத்தன்று மாலை 6 மணிக்கு ஆக்ரிதி தனது தாயிடம் மிகவும் இயல்பாகவே போனில் பேசியுள்ளார். மேலும், அன்று அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு ஒரு சிறிய விருந்தும் கொடுத்துள்ளார். மனரீதியாக மிகவும் வலிமையான ஆக்ருதி தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இல்லை என்றும், அவரது கணவர் குடும்பத்தினர் திட்டமிட்டு கொலை செய்துவிட்டு, அதை தற்கொலை போல சித்தரிக்க முயல்கிறார்கள் என்றும் ஆக்ருதியின் பெற்றோர் டெல்லி போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

   

திருமணம் முடிந்த சில நாட்களிலிருந்தே ஆக்ரிதியின் கணவர் அர்ஷத் மற்றும் அவரது குடும்பத்தினர் 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு அவரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடூரமாகத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. “உன்னைக் கொன்று விடுவேன்” என்று அர்ஷத் அடிக்கடி மிரட்டியதாகவும், சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் ஆக்ரி தியின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆக்ரிதி எதற்காகத் தன் வீட்டில் இருந்து 10 கி.மீ தூரமுள்ள இடத்திற்குச் சென்றார் என்ற கேள்விக்குக் கணவர் குடும்பத்தினர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளிப்பதால் சந்தேகம் வலுத்துள்ளது. இச்சம்பவம் குறித்து டெல்லி போலீசார் அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.