ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 21 வயது இளைஞரான மோனு, கடந்த ஜூன் 8-ஆம் தேதி இரவு மருந்து வாங்குவதற்காக மின்சார ஸ்கூட்டரில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறை, ஜூன் 10 அன்று ரேவாரியில் உள்ள அசல்வாஸ் கால்வாயில் இருந்து மோனுவின் சடலத்தை மீட்டது. ஆரம்பத்தில் இது தற்செயலாக நீரில் மூழ்கி ஏற்பட்ட மரணம் என்று கருதப்பட்ட நிலையில், மோனுவின் குடும்பத்தினர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் தீவிர தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் விரிவான விசாரணையை மேற்கொண்டதில் இது தற்செயலான மரணமல்ல, திட்டமிட்ட படுகொலை என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
விசாரணையில், மோனுவிற்கும் தன்னு என்ற பெண்ணிற்கும் சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. ஆனால், இந்தத் திருமணத்தில் தன்னுவிற்கு விருப்பமில்லை என்றும், அவர் சோனு என்ற தனது பழைய காதலனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. தங்களின் காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனைத் தீர்த்துக்கட்ட தன்னுவும் அவரது காதலனும் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, ஜூன் 8 அன்று தன்னு தனது கணவரை கசோலி கிராமத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கு ஏற்கனவே சோனுவின் ஏற்பாட்டின்படி காத்திருந்த ஹரியோம் மற்றும் அமன் ஆகிய கூட்டாளிகள், மோனுவின் வாயையும் மூக்கையும் பொத்தி கொடூரமான முறையில் கொலை செய்து உடலைக் கால்வாயில் வீசியுள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக தன்னு மற்றும் ஹரியோம் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சோனு மற்றும் அவரது கூட்டாளி அமனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 12-ஆம் வகுப்பு படித்துவிட்டு, தனது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஒரே வாழ்வாதாரமாக விளங்கிய மோனுவின் இந்தத் துயர மரணத்தில், பெண்ணின் குடும்பத்தினருக்கும் தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்திலும் பவால் டிஎஸ்பி சுரேந்திர ஷியோரன் தலைமையிலான காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
