கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக அரசியல் சூழல் மற்றும் தற்போதைய தவெக அரசு குறித்து அதிரடியான பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதை அடுத்து, தங்களது கட்சியின் தொண்டர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகமடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக வரும் விமர்சனங்களையும் கணைகளையும் தடுத்து நிறுத்தக்கூடிய ஒரு கவசமாகவும், கேடயமாகவும் மதிமுக என்றும் துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய வைகோ, கடந்த கால திமுக ஆட்சியில் நிலவிய லஞ்சம், ஊழல் மற்றும் கமிஷன் கலாச்சாரம் தற்போதைய தவெக ஆட்சியில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாகப் பாராட்டினார். “கமிஷன், கட்டிங், கரப்ஷன்” ஆகியவற்றில் இருந்து தமிழகம் மீட்கப்பட்டிருப்பதே இந்த அரசின் இமாலய சாதனை என்று தொழில்முனைவோரின் கருத்துகளை மேற்கோள் காட்டி அவர் பேசினார். அதே வேளையில், அதிமுகவுக்கு திமுக ஆதரவளிப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மையாக இருந்தால், அதைவிடப் பெரிய அரசியல் மோசடி எதுவும் இருக்க முடியாது என்றும், குதிரை பேர அரசியலைத் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்ததே திமுகதான் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.
மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் மாநில ஆளுநரின் வரம்பு மீறிய அதிகாரப் போக்கு குறித்தும் வைகோ தனது கண்டனங்களைப் பதிவு செய்தார். குறிப்பாக, மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய மோடி அரசுதான் பின்னணியில் இருந்து தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டிய அவர், இதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் இந்தி எதிர்ப்புப் போராட்டக் களம் போலக் கொந்தளித்து எழ வேண்டும் என்றார். மேலும், இந்த விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எடுத்துள்ள முன்னெடுப்புகளை வரவேற்பதாகக் குறிப்பிட்ட வைகோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீறி ஆளுநர் செயல்பட எந்த அதிகாரமும் இல்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
