“குதிரை பேரத்தை ஆரம்பிச்சதே நீங்கதானே”…. திமுக, அதிமுகவுக்கு அமைச்சர் செங்கோட்டையன் ஓபன் சேலஞ்ச்… தமிழக அரசியலில் அடுத்த திருப்பம்….!

By Nanthini on ஆடி 5, 2026

Spread the love

தமிழக தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தவெகவுக்கு (தமிழக வெற்றிக் கழகம்) தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சிக்குச் சிக்கல் வராமல் இருக்க இடைத்தேர்தல்களில் வெல்ல அக்கட்சி திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையே, தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக அமைச்சர் செங்கோட்டையன், எதிர்க்கட்சிகளின் இந்த விமர்சனங்களுக்குக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். “குதிரை பேரம் என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது; தமிழக அரசியலில் உண்மையில் குதிரை பேரத்தை உருவாக்கியதே திமுகதான்” என்று அவர் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த கால அரசியல் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தாங்கள் அதிமுகவில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மதிமுக எம்.எல்.ஏ ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து திமுகவில் இணைத்ததையும், பின்னர் அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனை பதவி விலகச் செய்து திமுக சார்பில் மீண்டும் போட்டியிட வைத்ததையும் நினைவு கூர்ந்தார். இதன் மூலம் குதிரை பேரத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகிறது என்றார். மேலும், “எல்லோரும் குதிரை பேரம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் புரியாத ஒன்றைப் புரிந்தது போலப் பேசும் அதற்குத் தமிழ்நாட்டில் வேறு பொருள் தேடிக் கொண்டிருக்கிறோம்; அதற்கான விளக்கம் கிடைத்தவுடன் நாங்களும் பதில் சொல்கிறோம்” என்று விநோதமான அரசியல் சொல்லாடல்களை அவர் விமர்சித்தார்.

   

தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசு வலிமையான மற்றும் நேர்மையான மக்கள் ஆட்சியை நடத்தி வருவதால் இடைத்தேர்தலுக்காக யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார். அன்று வெறும் 96 எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு மைனாரிட்டி ஆட்சி நடத்திய திமுக, தன் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமே கொடுக்கவில்லை என்றும், ஆனால் தவெக தங்களின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு மந்திரி சபையில் உரிய இடம் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருவதாகக் கூறியுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளின் பலத்தோடு தவெக அரசு அசைக்க முடியாத நேர்மையான ஆட்சியைத் தொடர்ந்து வழங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.