பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

By Swetha on ஆடி 4, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வகுப்பறையில் இருந்து பள்ளி மாணவர்களை ஆசிரியை ஒருவர் கோபத்துடன் வெளியே தள்ளும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது குழந்தையை பள்ளியில் சேர்க்கச் சென்ற பெற்றோர் ஒருவர், ஆசிரியை பாடம் நடத்தாமல் அலட்சியமாக இருந்ததைக் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பில் கூறப்படுவதாவது, அவர் தனது குழந்தையை பள்ளியில் சேர்க்கச் சென்றபோது, வகுப்பறையில் ஆசிரியர்கள் யாரும் பாடம் நடத்தாமல் மாணவர்கள் தனியாக அமர்ந்திருந்ததைக் கண்டுள்ளார். அப்போது அங்குள்ள ஆசிரியை பாடம் கற்பிப்பதற்குப் பதிலாக, அமர்ந்து வெள்ளரிக்காய் சாப்பிட்டுக் கொண்டு பொழுதை கழித்துக் கொண்டிருந்துள்ளார். இதனை அந்தப் பெற்றோர் தனது மொபைல் போனில் வீடியோ எடுக்கத் தொடங்கியதும் ஆத்திரமடைந்த ஆசிரியை, “நான் இவர்களுக்கு பாடம் நடத்த மாட்டேன், இனிமேல் இவர்களை பள்ளிக்கு அழைத்து வராதீர்கள்” என்று கூறி குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளியுள்ளார்.

   

இந்த முழு சம்பவமும் வீடியோவாகப் பதிவாகி வைரலானதை அடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டு, முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையில் ஆசிரியை மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.