அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகியுமான வைகைச்செல்வன் விமர்சித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, பாஜகவின் மூத்த தலைவர் வாஜ்பாயைக் குறித்து ‘சரியான மனிதர், தவறான கட்சியில் இருக்கிறார்’ என்று முன்பு குறிப்பிட்டதைச் சற்று மாற்றி, இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன் இக்கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
தவெகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவிலிருந்து தாங்கள் விலக வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி குறித்துத் தனிப்பட்ட முறையில் குறை சொல்ல தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்த அவர், அதிமுக என்ற இயக்கம் மிகச் சிறப்பானது என்றாலும், அதை வழிநடத்தும் தலைமை இபிஎஸ் தவறானதாக அமைந்துவிட்டது என்பதை இந்த ஒற்றை ஆங்கில வாசகத்தின் மூலம் அரசியல் வட்டாரத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
