தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா, தனது 43 வயதிலும் சிங்கிளாகவே கெத்து காட்டி வருகிறார். இவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. ஆனால், த்ரிஷாவின் திருமண நிலைப்பாடு தற்போதைய ‘ஜென் ஜி’ (Gen Z) தலைமுறையினரின் சிந்தனையோடு ஒத்துப்போவதாக உள்ளது. “எனக்கு திருமணத்தின் மீது பெரியளவில் நம்பிக்கை இல்லை; அதுவாக நடந்தால் சரி, இல்லையென்றாலும் பரவாயில்லை” என்று கூறும் த்ரிஷா, சமுதாயக் கட்டாயத்திற்காக ஒருபோதும் திருமண பந்தத்தில் இணையக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்.
திருமணம் மற்றும் டேட்டிங் குறித்து த்ரிஷாவிடம் மிகவும் தெளிவான புரிதல் உள்ளது. டேட்டிங் என்பது வெறும் படம் பார்ப்பதோ, வெளியே சென்று சாப்பிடுவதோ மட்டுமல்ல, அது இருவருக்கிடையேயான ஆத்மார்த்தமான புரிதலாக இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். “திருமணம் செய்வதற்கு முன்னால் நான் 100 முறை யோசிப்பேன்; ஏன்னா, எனக்கு விவாகரத்து செய்வதில் உடன்பாடு இல்லை” என்று த்ரிஷா தெரிவித்துள்ளார். ஒருவரைத் துணையாக ஏற்றுக் கொண்டால் இறுதிவரை அவருடன் வாழ வேண்டும் என்றும், யாருடைய மனதையும் காயப்படுத்தக் கூடாது என்றும் அவர் விரும்புகிறார்.
பல தம்பதிகள் காதலோ அல்லது மகிழ்ச்சியோ இல்லாமல், ஏதோ ஒரு காரணத்திற்காக மட்டுமே கடமைக்கு இணைந்து வாழ்வதை தான் பார்த்திருப்பதாக த்ரிஷா கூறுகிறார். அதுபோன்ற ஒரு போலி வாழ்க்கையை வாழ தனக்கு விருப்பமில்லை என்றும், காதலுக்கு மட்டுமே தன் வாழ்வில் முதலிடம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். தனக்கு திருமணம் என்பது இரண்டாம்பட்சம் தான் என்றும், உண்மையான மகிழ்ச்சியைத் தரும் தனது சரியான வாழ்க்கைத் துணைக்காகக் காத்திருக்கத் தயாராக இருப்பதாகவும் த்ரிஷா மனம் திறந்துள்ளார்.
கடந்த காலத்தில் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் த்ரிஷாவுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, பின்னர் நின்றது நாம் அறிந்ததே. திருமணத்திற்குப் பின் த்ரிஷா நடிக்கக் கூடாது என வருண் நிபந்தனை விதித்ததால், தனது உயிரான சினிமாவை விட முடியாமல் த்ரிஷா அந்தத் திருமணத்தை நிறுத்தினார். மேலும், நடிகர் ராணா டகுபாட்டியுடன் த்ரிஷாவுக்கு இருந்த நட்பு மற்றும் காதல் வதந்திகளும் அண்மையில் ஒரு விருது விழாவின் மூலம் மீண்டும் பேசப்பட்டது. அண்மையில் ஒரு திருமண விழாவில் த்ரிஷாவைப் பார்த்த ரசிகர்கள், “அடுத்ததாக உங்களுக்கு கோவாவில் கல்யாணம் நடக்க வேண்டும்” என தங்களின் வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
