“தவெக-வின் ரகசிய திட்டம்”… திடீரென ஆளுநரை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி…. தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் பரபரப்பு திருப்பம்….!

By Nanthini on ஆடி 4, 2026

Spread the love

தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து, திமுக பிரதிநிதிகள் குழுவினர் முக்கியப் புகார்கள் அடங்கிய மனு ஒன்றை அளித்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு சாரா தனி நபர்கள் பங்கேற்றது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று சுட்டிக்காட்டியுள்ள திமுகவினர், தமிழக அரசியல் சூழலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) வெளிப்படையாகவே குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஆளுநரிடம் தங்களது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த மனுவில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் திட்டமிட்டு மிரட்டியதாகக் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக நடைபெறும் இத்தகைய குதிரை பேர நடவடிக்கைகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மிரட்டப்படும் விவகாரத்தில், தமிழக பொறுப்பு ஆளுநர் உடனடியாக தலையிட்டு உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.