சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று துர்நாற்றத்துடன் மிதப்பதாக மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்த மூட்டையை மீட்டுப் பிரித்துப் பார்த்தபோது, அதில் வாலிபர் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு, அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இது குறித்து டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், உயிரிழந்த நபர் மேச்சேரி சாம்ராஜ்பேட்டையைச் சேர்ந்த சேட்டு (45) என்பதும், அவர் கேரளாவில் உள்ள பேக்கரி ஒன்றில் முறுக்கு சுடும் மாஸ்டராக வேலை பார்த்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசாரின் அடுத்தகட்ட விசாரணையில் இந்த கொலையின் பின்னணியில் இருந்த திடுக்கிடும் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. கொலை செய்யப்பட்ட சேட்டுவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி (50) என்ற பெண்ணிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களாக ஜோதி, சேட்டுவுடனான பழக்கத்தைக் குறைத்துக் கொண்டு, கூனாண்டியூரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்ற சேகர் (42) என்பவருடன் புதிய கள்ளத்தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேட்டு, சேகருடனான தொடர்பைக் கைவிடுமாறு ஜோதியைத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த ஜோதி, தனது புதிய கள்ளக்காதலன் சேகருடன் சேர்ந்து சேட்டுவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, திட்டமிட்டபடி சேட்டுவை வீட்டிற்கு வரவழைத்த ஜோதியும் சேகரும், அவரது கழுத்தை கத்தியால் அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர், கொலையை மறைப்பதற்காகச் சடலத்தைப் பிளாஸ்டிக் சாக்கு பையில் கட்டி, வீடு மாற்றுவதற்காக வாகனம் தேவைப்படுவதாகக் கூறி, அஜீத் (49) என்பவரது வாகனத்தில் ஏற்றி யாருக்கும் தெரியாமல் காவிரி ஆற்றில் வீசியுள்ளனர். இந்த அதிர்ச்சித் தகவல்கள் விசாரணையில் அம்பலமானதை அடுத்து, கொலைக்குக் காரணமான ஜோதி, அவரது கள்ளக்காதலன் சேகர் மற்றும் உடந்தையாக இருந்த வாகன ஓட்டுநர் அஜீத் ஆகிய மூன்று பேரையும் மேச்சேரி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
