கிருஷ்ணகிரி மாவட்டம் மூங்கம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (43). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு ஆஜராகி வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை வழக்கம் போல நீதிமன்றத்திற்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்ட சரவணன், அதன்பின் நீண்ட நேரமாகியும் வீட்டிற்குத் திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், காணாமல் போன நான்கு நாட்களுக்குப் பிறகு, போச்சம்பள்ளி அடுத்த மாதம்பதி சிலம்பம் காட்டுப் பகுதியில் சரவணன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணனின் மரணத்தில் மர்மம் மற்றும் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
