இந்தோனேசியாவின் மிகவும் பழைமைவாத மாகாணமான அச்சேவில், காரில் அமர்ந்து முத்தம் கொடுத்துக்கொண்டதை டிக்டாக்கில் நேரலையாக ஒளிபரப்பிய 22 வயது வாலிபருக்கும், 25 வயது பெண்ணுக்கும் தலா 21 பிரம்படிகள் பொதுவெளியில் வழங்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பதிவிடப்பட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, உள்ளூர் மக்களின் புகாரின் பேரில் ஷரியா போலீசார் அந்த ஜோடியைக் கைது செய்தனர். அவர்கள் ஏற்கனவே 4 மாதங்கள் சிறையில் இருந்ததால், நீதிமன்றம் முதலில் விதித்த 25 பிரம்படிகள் 21 ஆகக் குறைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் முகமூடி அணிந்த அதிகாரிகளால் தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேலும், அவர்கள் நேரலைக்கு பயன்படுத்திய செல்போன் மற்றும் கணினி சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு பொதுவெளியில் அழிக்கப்பட்டன.
உலகிலேயே மிக அதிக முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இந்தோனேசியா இருந்தாலும், அங்குள்ள சட்டங்கள் மதச்சார்பற்றவை; ஆனால், இஸ்லாமிய ஷரியா சட்டத்தைப் பின்பற்ற அனுமதி பெற்ற ஒரே மாகாணம் அச்சே மட்டுமே ஆகும். கடந்த 2006-ஆம் ஆண்டு ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி இந்த மாகாணத்திற்குத் தனி அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில், இங்கு திருமணத்திற்கு முந்தைய உடலுறவு, சூதாட்டம் மற்றும் மது அருந்துதல் போன்றவற்றுக்கு பொதுவெளியில் பிரம்படி வழங்குவது சட்டப்பூர்வமான ஒன்றாகும். இந்த நிலையில், ஒரு முத்த வீடியோவிற்காக வழங்கப்பட்ட இந்த கொடூரத் தண்டனை மனிதநேயமற்றது என்றும், சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு எதிரானது என்றும் ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ போன்ற சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.
