“விஜய் தான் CM.. ஆனா பின்னால இருந்து இயக்குறது இவரா?”…. அண்ணா அறிவாலயத்தில் வெடித்த எழிலரசன்… தமிழக அரசியலை உலுக்கும் பரபரப்பு….!

By Nanthini on ஆடி 3, 2026

Spread the love

தமிழக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், தற்போதைய தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது. கடந்த ஜூன் 20-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில், முதலமைச்சர் விஜய் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், “1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டை சினிமா துறையைச் சேர்ந்தவர்கள்தான் ஆட்சி செய்கிறார்கள், அவர்களை மக்களே வாக்களித்துத் தேர்ந்தெடுத்தனர். ஒரு எம்எல்ஏ சாதாரண குடிமகன் கிடையாது, அவர் ஏன் இப்படியெல்லாம் பேச வேண்டும்?” என்று கேள்வி எழுப்பி முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். நீதிமன்றத் தீர்ப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே போலீசார் அனிதா ராதாகிருஷ்ணனை அதிரடியாகக் கைது செய்தனர். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு கைது செய்யப்படும் முதல் முன்னாள் அமைச்சர் இவராவார்.

   

இந்தக் கைது நடவடிக்கைக்கு திமுக கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக கொள்கை பரப்புச் செயலாளர் எழிலரசன், இந்த கைது முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சாடியுள்ளார். தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதாகவும் குற்றம் சாட்டிய அவர், மக்களின் கவனத்தை திசைதிருப்பவே முன்ஜாமீன் மறுக்கப்பட்ட ஒரே மணி நேரத்திற்குள் அனிதா ராதாகிருஷ்ணன் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஆவேசப்பட்டார். மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவின் பணிகளை முடக்கவே இச்சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

   

முதலமைச்சர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த எழிலரசன், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கூறிய நாளிலிருந்தே தவெக குதிரை பேரத்தைத் தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்டார். விஜய்யின் இந்த குதிரை பேரம் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் பேசியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், “தமிழ்நாட்டிற்கு அதிகாரப்பூர்வ முதலமைச்சர் விஜய்தான் என்றாலும், பின்னணியில் இருந்து ஒட்டுமொத்த அரசையும் இயக்கும் ‘ஆக்டிங் முதலமைச்சர்’ ஆதவ் அர்ஜுனாதான்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.