பெங்களூருவில் மாடலிங் கனவோடு இருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இணையவழி கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு கிழக்கு பெங்களூருவைச் சேர்ந்த 21 வயதான நீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது 18-19 வயதில் சில புகைப்படங்களை எடுத்துள்ளார். ஒரு திறமை தேடல் தளத்தில் தனது சுயவிவரத்தைப் பதிவேற்றிய பிறகு, பல மாடலிங் முகவர்கள் அவரை அணுகியுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் தொழில்முறை மதிப்பீட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்படும், அவை ஒருபோதும் வெளியிடப்படாது என்ற முகவர்களின் உறுதியை நம்பி நீலா அவற்றை பகிர்ந்துள்ளார். பின்னர் அவர் மாடலிங் துறையை விட்டு வெளியேறியபோது, அந்த முகவர்களுடனான உரையாடல்களை நீக்கிவிட்டு அவர்களைத் தடுத்தும் உள்ளார். ஆனால், அவர் பகிர்ந்த அந்தப் புகைப்படங்கள் தற்போது அவரது கல்லூரித் தோழர்களிடையேயும், பல்வேறு ஆபாச இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்களிலும் பரவி பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 26 அன்று, நீலாவின் சுமார் 50 புகைப்படங்கள் ஆபாச இணையதளம் ஒன்றில் “MIGHT” என்ற பயனர் பெயரில் பதிவேற்றப்பட்டதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். அவரது தோழியின் உதவியோடு தேசிய இணையக் குற்றப் புகாரளிப்பு இணையதளத்தில் புகார் அளித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, வாட்ஸ்அப் மூலம் அவருக்கு மற்றொரு மிரட்டல் வந்துள்ளது. “dahsir17” என்ற பெயரில் வேறொரு வயது வந்தோருக்கான இணையதளத்திலும் அவரது புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருவதாக ஒரு மிரட்டல் செய்தி வந்துள்ளது. தன்னை ஒரு ஹேக்கர் என்று கூறிக்கொண்ட அந்த மிரட்டல் ஆசாமி, அந்தப் புகைப்படங்களை நீக்குவதற்கு ஈடாக நீலாவின் மேலும் சில அந்தரங்கப் புகைப்படங்களை அனுப்புமாறு கோரியுள்ளார்.
நீலா அதற்கு இணங்க மறுத்து காவல்துறையை அணுகியதால், ஆத்திரமடைந்த அந்த நபர் நீலாவின் முகத்தைப் போன்ற தோற்றமுடைய மற்றொரு உடம்பில் அவரது முகத்தைப் பொருத்தி புனையப்பட்ட ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றுவதாகக் கூறி மிரட்டத் தொடங்கியுள்ளார். அதே நாளில், அவரது புகைப்படங்கள் ரெட்டிட் (Reddit) தளத்திலும் பரவியதை நீலா கண்டறிந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இணையதளங்களில் இருந்து அந்த ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்கள் தற்போது அகற்றப்பட்டுவிட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
