முடிவுக்கு வருகிறதா திமுகவின் மெகா கூட்டணி… கூட்டணியில் இருந்து தனிப்பாதை நோக்கிய பயணம்… புதிய அரசியல் வியூகம்…!

By SATHISH R on ஆடி 2, 2026

Spread the love

2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம் மிக வேகமாக மாறி வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள சூழலில், திமுக கூட்டணியில் அதுவரை நீடித்துவந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் மற்றும் மதிமுக போன்ற முக்கிய கட்சிகள் தவெக அரசுக்கு தங்களின் ஆதரவை வழங்கியுள்ளன. இதனால் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக தலைமையிலான மெகா கூட்டணி முற்றிலும் சிதைந்துள்ள நிலையில், திமுக தனது அரசியல் வியூகத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த அரசியல் மாற்றங்களின் உச்சக்கட்டமாக, அண்மையில் திருவாரூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராஜா பேசிய கருத்து கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தைப் பாதுகாக்க இனி திமுகவிற்கு எந்தக் கூட்டணியும் தேவையில்லை என்றும், வரவிருக்கும் தேர்தல்களில் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் அவர் மு.க.ஸ்டாலினுக்கு பகிரங்கமாக கோரிக்கை வைத்தார். கூட்டணிக் கட்சிகள் விலகிச் சென்ற சூழலில், திமுகவின் தனிப்பட்ட பலத்தை நிரூபிக்க இதுவே சரியான தருணம் என்ற தொனி அவரது பேச்சில் வெளிப்பட்டது.

   

ஆ. ராஜாவின் இந்த அதிரடிப் பேச்சுக்கு பதிலளித்துப் பேசிய முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலைஞர் வழியில் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வதே எனது கடமை; நாமாக யாரையும் கூட்டணியை விட்டு விலக்கியதில்லை” என்று குறிப்பிட்டாலும், “தற்போது கூட்டணியே தேவையில்லை என்று நம் கட்சியினரே கூறத் தொடங்கிவிட்டனர், அந்த கருத்தையும் நாங்கள் விரைவில் பரிசீலிப்போம்” என மிக முக்கியமான ஒரு அரசியல் நகர்வை வெளிப்படுத்தியுள்ளார். ஸ்டாலினின் இந்த சூசகமான பதில், திமுகவின் அடுத்தகட்டப் பயணம் தனிப்பாதையை நோக்கித்தான் இருக்கப் போகிறது என்பதை உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

   

இதன் தொடர்ச்சியாக, வரவிருக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் திமுக எவ்விதக் கூட்டணியும் இல்லாமல் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டு வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணிக் கட்சிகளின் பலத்தை நம்பியிருக்காமல், திமுகவின் சொந்த வாக்கு வங்கி எந்த அளவில் உள்ளது என்பதை நேரடியாகச் சோதித்துப் பார்க்க கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். இடைத்தேர்தலில் திமுக எடுக்கப்போகும் இந்த ‘தனித்து போட்டி’ என்ற அதிரடி முடிவுதான், 2031 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அக்கட்சியின் அடித்தளமாகவும், எதிர்காலப் பாதையாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.