“அப்படியே தூக்கி வீசப்பட்ட தலை”… ஓட ஓட விரட்டி 5 வயதுக் குழந்தையோடு தந்தை படுகொலை… நெல்லையில் நடந்த சினிமா பாணி கொடூரம்…!

By Nanthini on ஆடி 2, 2026

Spread the love

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பட்டப்பகலில் அரங்கேறியுள்ள கொடூர இரட்டை கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சினிமாவில் வரும் காட்சிகளைப் போல, இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவர்களை மர்ம கும்பல் ஒன்று காரால் மோதி தள்ளிவிட்டு, பின்னர் அரிவாளால் சரமாரியாக வெட்டித் தள்ளியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு, நடுரோட்டில் வீசப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சட்டம் ஒழுங்கு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மூலச்சி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (45) என்பவர், தனது மூத்த மகன் சின்னதுரை மற்றும் 5 வயது இளைய மகனுடன் மோட்டார் சைக்கிளில் சேரன்மகாதேவி அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, இவர்களைப் பின்தொடர்ந்து வந்த கார் ஒன்று பைக் மீது பலமாக மோதியது. இதில் மூன்று பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்த கணப்பொழுதில், காரில் இருந்து இறங்கிய ஆயுதமேந்திய கும்பல் காளிமுத்துவை கொடூரமாக வெட்டி, அவரது தலையைத் துண்டித்து நெல்லை – கல்லிடைக்குறிச்சி சாலையில் வீசிவிட்டு தப்பியோடியது. இந்த கோரத் தாக்குதலில் காளிமுத்துவின் 5 வயது குழந்தையும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்; படுகாயமடைந்த மூத்த மகன் சின்னதுரை தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட எஸ்பி மற்றும் காவல்துறையினர், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு மூலச்சி பகுதியில் சாதி ரீதியான மோதலில் பெருமாள் பாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கும், தற்போதைய கொலைக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த சம்பவத்திற்குப் பழிக்கு பழியாகவே இந்த இரட்டை கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.