தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்கள், பெண்கள் மற்றும் பட்டியலினத்தவருக்குப் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு கான்ட்ரக்டர்களுக்கான புதிய டெண்டர் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பின்படி, எந்தவொரு முன் அனுபவமும் இல்லாத தகுதியான நபர்கள் ரூ.10 லட்சம் வரையிலான சிறு அரசு டெண்டர்களை எடுத்து பணிகளை நேரடியாக மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், தாங்கள் வசிக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட வேலையின்மை சான்றிதழைச் சமர்ப்பித்து, வெறும் ரூ.20,000 வைப்புத்தொகையாகச் செலுத்தினால் போதுமானது. எளிய நடைமுறைகள் மூலம் புதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தத் திட்டம், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, சுயதொழில் முனைவோராக அவர்கள் உருவெடுக்கப் பெரும் ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
