கூகுள் மேப்பை நம்பி சென்ற குடும்பம்…. செல்லும் வழியில் காத்திருந்த எமன்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்…. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

By SATHISH R on ஆடி 2, 2026

Spread the love

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த தம்பிராஜ் (50) என்பவர், தனது உறவினர்கள் மூன்று பேருடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காரில் புறப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட தேனி – திண்டுக்கல் சாலை, ஜி.மீனாட்சிபுரம் பகுதியில் கார் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே கொடைக்கானல் நோக்கிச் சென்ற ஈச்சர் லாரியுடன் கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

   

இந்த கோர விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி தம்பிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரில் பயணித்த மற்ற மூவரும் பலத்த படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், காரின் இடிபாடுகளை அகற்றி தம்பிராஜின் உடலை மீட்டனர். மேலும், படுகாயமடைந்த மூவரையும் மீட்டு தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

   

இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. எர்ணாகுளத்தில் இருந்து மதுரைக்கு வந்த அவர்கள், வழி தெரியாததால் ‘கூகுள் மேப்’ (Google Map) உதவியுடன் காரைச் செலுத்தியுள்ளனர். பொதுவாக கேரளாவில் இருந்து மதுரைக்குச் செல்ல தேனி – உசிலம்பட்டி சாலையைப் பயன்படுத்துவதே எளிதான மற்றும் வழக்கமான வழியாகும். ஆனால், கூகுள் மேப் அந்தச் சாலையைக் காண்பிக்காமல், பெரியகுளம் – வத்தலகுண்டு வழியிலான மாற்றுச் சாலையைக் காண்பித்துள்ளது.

 

கூகுள் மேப் காட்டிய வழியை அப்படியே நம்பி காரை இயக்கியதால், அவர்கள் சம்பந்தமில்லாத பாதையில் நுழைந்து இந்தத் துயர விபத்தில் சிக்கியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு மற்றும் கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால், கேரளாவைச் சேர்ந்த கார் விபத்தில் சிக்கி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பங்களை மட்டுமே முழுமையாக நம்பி பயணிக்கக் கூடாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.