மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள இலுப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கலாநிதி, நள்ளிரவில் மர்ம கும்பலா மிகக் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் திமுக கள்ளிக்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளரான இவர், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் தனது நண்பர் ஹரிஹரன் மற்றும் உறவினர் அஜித்துடன் இருசக்கர வாகனத்தில் குராயூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர்கள் சோளம்பட்டி குதிரை கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த ஒரு மர்ம பொலிரோ கார் திட்டமிட்டபடி இவர்களது வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது.
விபத்தின் தாக்கத்தால் மூவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்த அடுத்த கணமே, காரில் இருந்து கத்தி, பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு மர்ம கும்பல் இறங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஹரிஹரன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓடித் தப்பியுள்ளார். ஆனால், அந்த கும்பல் கலாநிதியை நாலாபுறமும் சுற்றி வளைத்து அவரது முகம், கழுத்து, கை என உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளது. தடுக்க முயன்ற அவரது உறவினர் அஜித்துக்கும் பலத்த வெட்டுக்காயம் விழுந்துள்ளது.
கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு அந்த மர்ம கும்பல் காரில் தப்பியோட, ரத்த வெள்ளத்தில் மிதந்த அஜித் சாமர்த்தியமாக போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளிக்குடி காவல் துறையினர், உயிரிழந்த கலாநிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த அஜித்தும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, கொலையாளிகளைப் பிடிக்க தீவிர வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இப்பகுதியில் உள்ள ஆற்றில் மணல் அள்ளுவது தொடர்பாக கலாநிதிக்கும் உள்ளூர் மாஃபியா கும்பல் ஒன்றுக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த மணல் கொள்ளை பகை காரணமாகவே இந்த பழிவாங்கும் கொலை அரங்கேறியதா, அல்லது இதன் பின்னணியில் வேறு அரசியல் காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் திட்டமிட்டு கார் ஏற்றி, பட்டாக்கத்தியால் திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
