தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் தாளமுத்து (60). இவருடைய 32 வயது மகன் அருள்ராஜ், கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார். வாகன ஓட்டுநரான அருள்ராஜ், நாள்தோறும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் உள்ள பெற்றோரைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்துவதையும், அக்கம் பக்கத்தினரிடம் வம்புக்குச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இவருடைய மதுப் பழக்கத்தை மாற்றக் குடும்பத்தினர் கடந்த 2021-ஆம் ஆண்டு போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துச் சிகிச்சை அளித்தபோதிலும், அங்கிருந்து வந்த பிறகும் அருள்ராஜின் நடத்தையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விடுமுறைக்காகத் தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்த அருள்ராஜின் சகோதரி குழந்தையைக் கொலை செய்துவிடுவதாக அவர் மிரட்டியுள்ளார். இதனால் குடும்பத்தினர் நீண்ட நாட்களாக மிகுந்த மன அச்சத்தோடும், நிம்மதியற்ற நிலையிலும் வாழ்ந்து வந்துள்ளனர். நேற்று இரவும் வழக்கம் போல மதுபோதையில் வீட்டிற்கு வந்த அருள்ராஜ், தனது தந்தை மற்றும் தாயுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாளமுத்து, மகனை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு வீட்டின் கதவை உட்புறமாகப் பூட்டிவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை, போதை தலைக்கேறிய நிலையில் வீட்டின் முன்பே படுத்து உறங்கிக் கொண்டிருந்த அருள்ராஜ் மீது, ஆத்திரத்தில் இருந்த தந்தை தாளமுத்து திடீரென மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில், அருள்ராஜ் அலறியபடியே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பயங்கரச் சம்பவத்தை அரங்கேற்றிய பிறகு, தாளமுத்து நேரடியாகச் சிப்காட் காவல் நிலையத்திற்குச் சென்று, தனது மகனைக் கொலை செய்துவிட்டதாகக் கூறி போலீசாரிடம் சரணடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிப்காட் காவல்துறையினர், அருள்ராஜின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாளமுத்துவை முறைப்படி கைது செய்துள்ள போலீசார், நீண்ட கால குடும்பத் தகராறு மற்றும் மகனின் மதுப் பழக்கம் தான் இந்த கொலைக்குக் காரணமா, அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையால் பெற்ற மகனையே தந்தை தீயிட்டுக் கொளுத்திய இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
