“என் மனைவி, மகளை நானே கொன்றேன்”…. தலை சிதறி இறந்து கிடந்த சிறுமி… தொழிலதிபர் வெளியிட்ட பகீர் வீடியோ… தர்மபுரியில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்….!

By Nanthini on ஆடி 1, 2026

Spread the love

தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும் லாரியின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி கோட்டை கோயில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 45 வயதுடைய சந்தோஷ் என்பவர் ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் டிரேடிங் தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளார். சமீபகாலமாக தொழிலில் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடி காரணமாக, பல்வேறு இடங்களில் வாங்கிய கடன்களையும், அடமானம் வைத்த நகைகளையும் மீட்க முடியாமல் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை சந்தோஷின் மனைவி சரண்யாவை (35) அவரது பெற்றோர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது அழைப்பு ஏற்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவர்கள் நேரில் சென்று பார்த்தபோது, சரண்யா கழிவறையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையிலும், விடுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட 9-ம் வகுப்பு மகள் சாத்விகா (14) ஹாலில் தலை சிதறிய நிலையிலும் பிணமாகக் கிடந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த தகவலின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். அதே நேரத்தில், தர்மபுரி அருகே புறவடை பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த நபர் சந்தோஷ் தான் என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

   

தொடர் விசாரணையில், கடன் சுமையால் கடும் மன அழுத்தத்தில் இருந்த சந்தோஷ், தன் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தது தெரியவந்துள்ளது. அதன்படி, நேற்று காலை மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தவர், பின்னர் மகள் படிக்கும் பள்ளி விடுதிக்குச் சென்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்து சுத்தியலால் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர், தனது இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலைக்குச் சென்று, வேகமாக வந்த லாரியின் முன் பாய்ந்து அவரும் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

   

சந்தோஷ் தற்கொலைக்கு முன்பு பதிவு செய்திருந்த சில வீடியோக்களை போலீசார் தற்போது கைப்பற்றியுள்ளனர். அந்த வீடியோவில், “என் சாவுக்கு யாரும் காரணமில்லை, கடன் சுமையால் நானே என் மனைவி மற்றும் மகளைக் கொன்றேன்; என் தாயையும் கொல்ல நினைத்தேன், ஆனால் முடியவில்லை; என் மனைவியின் கணக்கில் உள்ள 45 லட்சம் ரூபாயை எடுத்து கடனை அடைத்துவிடுங்கள்” என்று சிலரது பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடன் பிரச்சனையால் பலியான இந்த சோகச் சம்பவம் தர்மபுரி மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.