சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக பாஜகவில் மாநில தலைமை மாற்றம் குறித்த விவாதங்கள் டெல்லி வரை பலமாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. தற்போதைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்படலாம் என்ற தகவல் மீண்டும் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், அவருக்கு டெல்லியில் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், அடுத்த புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பும், அதற்கான ரேஸில் ராம சீனிவாசன், அர்ஜுன மூர்த்தி, ஏ.பி.முருகானந்தம், வினோஜ் செல்வம் என ஒரு பெரிய பட்டாளமே குதித்திருப்பதும் கட்சிக்குள் போட்டியை தீவிரப்படுத்தியுள்ளது.
இத்தகைய சூழலில், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் “இது நம்ம இயக்கம்” என்ற புதிய என்ட்ரி ஒட்டுமொத்த அரசியல் திட்டத்தையும் தலைகீழாக மாற்றியமைத்துள்ளது. அவர் கட்சியை விட்டு வெளியேறி தனிப் பாதை காட்டியதால், பாஜகவில் உள்ள அதிருப்தி கோஷ்டியினர் அவர் பக்கம் நகர்ந்துவிடுவார்களோ என்ற பயம் தேசிய தலைமைக்கு வந்துள்ளது. உடனே நயினாரை மாற்றினால் அது அண்ணாமலைக்கு சாதகமாகிவிடும் என நினைத்து கடந்த மாதம் இந்த மாற்றம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த இடைவெளியில் தன் பதவியைக் காக்க நயினார் புதிய முகங்களை கொண்டு வர ஆலோசித்தாலும், அடிமட்ட நிலவரம் டெல்லிக்கு இன்னும் நெருக்கடியையே கொடுத்துக் கொண்டிருக்கிறது.
தற்போது பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் பலரும் அண்ணாமலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதால், காலியாகும் இடங்களையும் மாநிலப் பதவிகளையும் பிடிக்க உட்கட்சிக்குள் கடுமையான மல்லுக்கட்டே நடக்கிறது. இதில் உச்சக்கட்ட திருப்பமாக, “கேட்கும் பதவி கிடைக்காவிட்டால் நாங்களும் அண்ணாமலை பக்கமே போய்விடுகிறோம்” என பல நிர்வாகிகள் ஓப்பனாகவே பிளாக்மெயில் செய்யும் தொனியில் காய் நகர்த்தி வருகின்றனர். இதனால், தேர்தல் வேலைகளைச் சரியாகப் பார்க்காதவர்களைத் தூக்க வேண்டும், அதே சமயம் அண்ணாமலை பின்னால் ஆட்கள் போவதையும் தடுக்க வேண்டும் என சீனியர்கள் அடுத்தடுத்து ரகசியக் கூட்டங்களை கூட்டி கையை பிசைந்து வருகின்றனர்.
இந்த உட்கட்சி சலசலப்புகளுக்கு மத்தியில், கூட்டணியில் உள்ள தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் வெடித்திருப்பது நயினார் நாகேந்திரனுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நயினார் தன் பக்கம் இழுத்துக் கொண்டதால் டென்ஷனான திருமாறன், தமிழக பாஜக தலைமை ஒரு சிண்டிகேட் போல செயல்படுவதாகவும், நயினாரை உடனடியாக மாற்றாவிட்டால் கூட்டணியில் நீடிப்பது குறித்து டெல்லிதான் யோசிக்க வேண்டும் என்றும் ஓப்பனாக அறிக்கை விட்டுள்ளார். உட்கட்சி மோதல், அண்ணாமலையின் மறைமுக அழுத்தம், கூட்டணிக் கட்சியின் மிரட்டல் என நயினாரைச் சுற்றியுள்ள வளையம் இறுகி வரும் நிலையில், டெல்லியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
