ஒடிசா மாநில அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில், ‘ஹம் தில் தே சுகே சனம்’ என்ற புகழ்பெற்ற பாலிவுட் திரைப்படத்தின் ‘நிம்புடா நிம்புடா’பாடல் அச்சடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானி நாட்டுப்புறக் கலையை அடிப்படையாகக் கொண்ட இப்பாடல், எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, கல்வித்துறையின் மீதான கடுமையான விமர்சனங்களையும் கேலிகளையும் எழுப்பியுள்ளது.
இது ஒரு தனிப்பட்ட தவறு அல்ல என்பதும், ஒடிசாவின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) வெளியிட்ட புத்தகங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிழைகள் இருப்பது தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, எட்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களில் மட்டும் 705 பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன. கர்நாடக சட்டமன்றக் கட்டிடம் ஒடிசா சட்டமன்றம் எனவும், சர் ஐசக் நியூட்டன் உலகின் “சிறந்த விமானி” (Pilot) எனவும், கர்நாடகாவின் ஹம்பி தளம் கொனாரக் சூரியக் கோவில் எனவும் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற பல வரலாற்று மற்றும் அறிவியல் பிழைகள் அடுக்கடுக்காக வெளிவந்துள்ளன.
இவ்விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் அரசியல் மற்றும் சமூக அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி இந்த குளறுபடிகள் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளார். அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில பள்ளி மற்றும் வெகுஜனக் கல்வி அமைச்சர் நித்யானந்த கோண்ட் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வண்ணம், அனைத்து பிழைகளும் திருத்தப்பட்ட புதிய பாடப்புத்தகங்கள் விரைவில் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
